கடலூர் அருகே உள்ள விலங்கல்பட்டு கிராமத்தை அடுத்துள்ள குழந்தைகுப்பம் பகுதியில் கிராவல் குவாரி நடத்துவது தொடர்பாக இரு தரப்பினரிடையே ஏற்பட்ட தகராறில் கைத் துப்பாக்கி காட்டி மிரட்டும் சம்பவம் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
குழந்தைகுப்பம் பகுதியில் கிராவல் குவாரி நடத்தி வரும் கிருஷ்ணமூர்த்தி மற்றும் அவரது மகன் கோபால் ஆகியோருக்கும், அதே பகுதியைச் சேர்ந்த அதிமுக பிரமுகர் என கூறப்படும் கொஞ்சிகுப்பம் வினோத் என்பவருக்கும் இடையே தொழில்துறை போட்டி காரணமாக அடிக்கடி மோதல் இருந்து வந்ததாக கூறப்படுகிறது.
இந்த நிலையில் வினோத் தனது ஆதரவாளர்களுடன் குழந்தைகுப்பத்தில் உள்ள கிருஷ்ணமூர்த்தி மற்றும் அவரது மகன் கோபால் நடத்தி வரும் குவாரி பகுதிக்குள் புகுந்து தகராறில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது. அப்போது கிருஷ்ணமூர்த்தியின் மகன் கோபால், தன்னிடம் இருந்த கைத் துப்பாக்கியை எடுத்து மிரட்டியதாக தகவல் வெளியாகியுள்ளது.
குறிப்பிட்ட கைத் துப்பாக்கி உரிய லைசன்ஸ் பெற்றதாக கூறப்பட்டாலும், பொதுவெளியில் அதை எடுத்து மிரட்டுவது சட்ட விரோதமானது என்பதால் இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இரு பிரிவினர் ஒருவருக்கொருவர் மோதிக் கொண்டு, கைத் துப்பாக்கியை காட்டி விரட்டும் காட்சிகளை அங்கிருந்தவர்கள் செல்போனில் பதிவு செய்துள்ளனர். அந்த வீடியோ காட்சிகள் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.
