சென்னை அண்ணா அறிவாலத்தில் இன்று திமுக – சிபிஎம் இடையே மூன்றாவது கட்ட பேச்சுவார்த்தை இன்று நடைபெற்றது. இதற்கு பின்னர் செய்தியாளர்களை சந்தித்த மா.கம்யூ மாநிலச் செயலாளர் பெ.சண்முகம், “கடந்த சட்டப்பேரவைத் தேர்தலின்போது போட்டியிட்ட தொகுதிகளை விட கூடுதல் தொகுதிகளை வழங்க வேண்டும் என திமுகவிடம் நாங்கள் வற்புறுத்தியுள்ளோம். நிறைய கட்சிகள் இருப்பதால் இந்தப் பேச்சுவார்த்தை உடனடியாக முடிவுக்கு வருவதில் சிரமங்கள் உள்ளன.
ஆகவே, கூடுதல் தொகுதிகளை கேட்ட கோரிக்கை தொடர்பாக முதல்வரிடம் கலந்துபேசி இன்று இரவு சொல்வதாக திமுக தரப்பில் கூறியுள்ளனர். அடுத்தகட்ட பேச்சுவார்த்தையில் இதில் முடிவு எட்டப்படும் என நம்புகிறோம். ஏப்ரல் 30-ஆம் தேதிதான் தமிழகத்தில் வேட்புமனுத் தாக்கல் தொடங்குகிறது. எனவே, தொகுதிப் பங்கீட்டை இறுதி செய்ய கால அவகாசம் உள்ளது.
புதிய கட்சிகள் கூட்டணிக்கு வந்துள்ளதால், தொகுதிகளை குறைத்துக் கொள்ளுமாறு திமுக தரப்பில் எங்களிடம் வலியுறுத்தினர். ஆனால், நாங்கள் அதனை ஏற்க முடியாது சொல்லிவிட்டோம். மார்க்சிஸ்ட் கடந்த முறை பெற்றதை விட கூடுதல் தொகுதிகளைப் பெற வேண்டும் என்பதில் உறுதியாக உள்ளோம். அதில் உறுதியாக இருப்பதால்தான் பேச்சுவார்த்தை தொடர்ந்து நீடித்து வருகிறது. ஒவ்வொரு கட்சியும் அதன் பலத்துக்கு ஏற்ப தொகுதிகளைப் பெறுகின்றனர். எனவே காங்கிரஸ் கூடுதல் தொகுதிகளைப் பெற்றது பற்றி கவலை இல்லை. மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தன்னுடைய பலத்துக்கு ஏற்ப கூடுதல் தொகுதிகளை எதிர்பார்க்கிறது” என கூறினார்.
திமுக தலைமையிடம் 12 தொகுதிகளை கொண்ட பட்டியலை விசிக கொடுத்தது. இதன் காரணமாக கடந்த மார்ச் 2ஆம் தேதி விடுதலை சிறுத்தைகள் கட்சியோடு பேச்சுவார்த்தை நடைபெற்ற நிலையில், அடுத்தக்கட்ட பேச்சுவார்த்தை சுமார் 15 நாட்களை கடந்தும் இன்னும் நடைபெறவில்லை.
இது தொடர்பாக விடுதலை சிறுத்தைகள் கட்சி நிர்வாகி கூறுகையில், விடுதலை சிறுத்தைகள் கட்சி தமிழகம் முழுவதும் வளர்ச்சி அடைந்துள்ளது. எனவே 10 தொகுதி விடுதலை சிறுத்தைக்கு கட்சிக்கு ஒதுக்க வேண்டும். எனவே விடுதலை சிறுத்தைகளின் கட்சியின் வளர்ச்சியை புரிந்து திமுக தங்களை பேச்சுவார்த்தைக்கு அழைக்கும் என காத்திருப்பதாக தெரிவித்தனர்.
