”கூட்டணிக்காக விஜய் வீட்டு வாசலைத் தட்டிக் கொண்டிருக்கிறார் பழனிசாமி” – ஓ.பன்னீர்செல்வம் தாக்கு

Spread the love

விருதுநகர் மாவட்டம், ஶ்ரீவில்லிபுத்தூரில் தி.மு.க நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. அமைச்சர்கள் சாத்தூர் ராமசந்திரன், தங்கம் தென்னரசு ஆகியோர் தலைமை வகித்தனர்.

இதில், முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டு பேசுகையில், “நான் அண்ணா தி.மு.கவிலிருந்து, அண்ணா தொடங்கிய தி.மு.கவில் இணைந்துள்ளேன். அண்ணா, கருணாநிதி, எம்.ஜி.ஆர், ஜெயலலிதா, ஸ்டாலின் இவர்கள்தான் மக்கள் தேர்ந்தெடுத்த முதல்வர்கள். எடப்பாடி பழனிசாமியும், நானும் முதல்வராக நியமிக்கப்பட்டவர்கள்.

ஓ.பி.எஸ் வருகை
ஓ.பி.எஸ் வருகை

பழனிசாமி ஊர்ந்து சென்று முதல்வரானார். தன்னை முதல்வர் ஆக்கியவர்களுக்கே விசுவாசமாக இல்லாதவர். வாக்களிக்கும் மக்களுக்கு விசுவாசமாக இருப்பாரா? பழனிசாமியைப் பற்றி நான் சொல்ல வேண்டியது இல்லை. உங்களுக்கே தெரியும்.

அவர் உடன் இருப்பது உதயகுமார். நான் முந்தைய மக்களவைத் தேர்தலில் ராமநாதபுரத்தில் போட்டியிட்டபோது 6 ஒ.பன்னீர்செல்வத்தைக் கொண்டு வந்து நிறுத்தினார் உதயகுமார். சி.வி.சண்முகம், திண்டுக்கல் சீனிவாசன், உதயகுமார் போன்றோரை நம்பி மக்கள் எப்படி வாக்களிப்பார்கள்?

தலையைப் பிய்த்துக் கொண்டு பேய் பிடித்தது போல பழனிசாமி அங்கும் இங்கும் ஓடிக் கொண்டிருக்கிறார். கூட்டணிக்காக விஜய் வீட்டு வாசலைத் தட்டிக் கொண்டிருக்கிறார். மக்களவைத் தேர்தலில் அ.தி.மு.க 7 இடங்களில் டெபாசிட் காலி ஆனது.

14 இடங்களில் மூன்றாம் இடம் பெற்றது. பழனிசாமியும், உதயகுமாரும் அ.தி.மு.க-வைக் குழி தோண்டி புதைத்து விட்டனர். எம்.ஜி.ஆர் உருவாக்கிய சட்ட விதியை ரத்து செய்து, பொதுச்செயலாளர் ஆகி உள்ளார் பழனிசாமி.

கூட்டத்தில் ஓ.பி.எஸ்
கூட்டத்தில் ஓ.பி.எஸ்

10 மாவட்டச் செயலாளர்கள் முன் மொழிய வேண்டும் என்றால் பணம் வாங்காமல் இருப்பார்களா? இனி அ.தி.மு.கவில் மிட்டா மிராசுதார்தான் பொதுச் செயலாளராக வர முடியும். சபாநாயகர் கூட சில நேரம் எதிர்க்கட்சி உறுப்பினரைக் கண்டித்தாலும், முதல்வர் பேச விட்டு, பதில் அளிப்பார். தி.மு.க கூட்டணியிலிருந்து ஒரு கட்சிகூட வெளியேறாததற்கு, கூட்டணிக் கட்சிகளை முதல்வர் கண்ணியத்துடன் நடத்துவதே காரணம்” என்றார்.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *