முறுக்குக்கு பெயர்போன இந்த தொகுதி, திருச்சி மாவட்டத்தில் உள்ள ஒன்பது தொகுதிகளில் ஓன்று. மருங்காபுரி தொகுதியாக இருந்து வந்த இந்த இது, தொகுதி மறுசீரமைப்புக்கு பிறகு கடந்த 2011 – ம் வருடம் நடைபெற்ற தேர்தலில் இருந்து மணப்பாறை தொகுதியாக பரிமளித்து வருகிறது.
மருங்காபுரி டு மணப்பாறை
மருங்காபுரி சட்டமன்ற தொகுதியாக இருந்தவரை பெரும்பாலும் தி.மு.க சார்பிலேயே வேட்பாளர்கள் நிறுத்தப்பட்டுள்ளனர். கடைசியாக, இந்த தொகுதியில் 2006 -ம் வருட தேர்தலில் தி.மு.க-வைச் சேர்ந்த சல்மா வேட்பாளராக நிறுத்தப்பட்டார். அதன்பிறகு, மணப்பாறை தொகுதியாக அது மாறிய பிறகு கடந்த 2011 – ம் வருடம் நடைபெற்ற தேர்தலில் காங்கிரஸ் கட்சிக்கும், கடந்த 2016 – ம் வருடம் நடைபெற்ற தேர்தலில் இந்திய யூனியன் முஸ்லீம் லீக் கட்சியை சேர்ந்த எம்.ஏ.முகமது நிசாமுக்கும் இந்த தொகுதி ஒதுக்கப்பட்டது.

அதேபோல், கடந்த தேர்தலில் தி.மு.க கூட்டணி சார்பில் மனிதநேய மக்கள் கட்சிக்கு ஒதுக்கப்பட்டு, அந்த கட்சியின் பொதுச்செயலாளர் அப்துல் சமது வேட்பாளராக களமிறக்கப்பட்டு, வெற்றிவாகை சூடினார். இப்படி, கடந்த மூன்று தேர்தல்களாக இந்த தொகுதி தி.மு.க கூட்டணியில் உள்ள கூட்டணி கட்சிகளுக்கு ஒதுக்கப்பட்டபோதே, மணப்பாறை தொகுதியில் உள்ள தி.மு.க புள்ளிகள், “மணப்பாறையை தி.மு.க-வுக்கு ஒதுக்க வேண்டும்’ என்று கடுமையாக போர்க்கொடி தூக்கி வந்தனர்.
ஆனாலும், தி.மு.க தலைமை மணப்பாறையை கூட்டணி கட்சிகளுக்கே தள்ளிவிட்டு, லோக்கல் உடன்பிறப்புகளுக்கு கடுக்காய் கொடுத்து வந்தது. இந்நிலையில், கடந்த சில மாதங்களுக்கு முன்பிருந்தே, ‘இந்தமுறை எப்படியும் தி.மு.க-வுக்கே மணப்பாறையை ஒதுக்க வைப்போம். அதற்காக, எந்த லெவலுக்கு வேண்டுமானாலும் இறங்கி கடுமையாக போராடுவோம். அப்படியும், கூட்டணி கட்சிக்கு ஒதுக்கினால், ஒத்துழையாமை இயக்கம் நடத்துவோம்’ என்று மணப்பாறை தொகுதி உடன்பிறப்புகள் முஷ்டியை முறுக்கி வந்தனர்.