ஒருவேளை ராமதாஸ் தி.மு.க கதவை தட்டலாம். அவர் தி.மு.க-வை தேர்வு செய்தால், தி.மு.க-வுக்குதான் நெருக்கடி ஏற்படும். ஏற்கெனவே, தி.மு.க கூட்டணிக் கட்சிகள் கூடுதல் தொகுதிகளைக் கேட்டுக்கொண்டிருக்கிறது.
எனவே, ராமதாஸுக்கு தொகுதி ஒதுக்கீடு செய்வதில் தி.மு.க-வுக்கு சிக்கல் இருக்கும். இன்னும் சிலக் கட்சிகள் தி.மு.க கூட்டணிக்கு வருவதற்கான சூழல் நிலவுகிறது. அது தவிர தி.மு.க கூட்டணியில் வி.சி.க இருக்கிறது. ராமதாஸ் வருகையை வி.சி.க எப்படி எதிர்கொள்ளும் என்றக் கேள்வியும் இருக்கிறது.
மேலும், கடந்த மூன்று தேர்தல்களிலும் பா.ம.க இல்லாமலே தேர்தலை எதிர்க்கொண்டது தி.மு.க. எனவே, பா.ம.க கூட்டணிக்குள் வருவது லாபமும் இல்லை நஷ்டமும் இல்லை என்ற நிலைதான் தி.மு.க-வுக்கு. இத்தகைய சூழலில் கூட்டணி அமைக்கும் விவகாரம் ராமதாஸுக்கு கொஞ்சம் சிரமமான காரியம்தான்.

இதுமட்டுமில்லாமல், பா.ம.க ஓட்டு பலம் ராமதாஸுக்கா… அன்புமணிக்கா… யாருக்கு அதிகம்? என்பது தேர்தலுக்குப் பிறகுதான் தெரியும். அதனால் தொகுதிப் பங்கீடு கேட்பதும், கொடுப்பதும் சற்று கடினமாகவே இருக்கும்.
சமீபத்தில் நடந்த பொதுக்குழு கூட்டம் ஒன்றில் பேசிய ராமதாஸ், “அன்புமணி ஆர்.எஸ்.எஸ்-ஸின் அடிமை” எனப் பேசியிருந்தார். மேலும், தேர்தல் ஆணையம் பா.ம.க தலைவராக அன்புமணியைதான் அங்கீகரிக்கிறது. அதனால், பா.ம.க-வின் மாம்பழச் சின்னத்தை அன்புமணிக்கு கொடுக்கும் முடிவு ஏற்கெனவே எடுக்கப்பட்டுவிட்டது.