முந்துவது யார்?
தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டுவிட்டது. தற்போதைய நிலவரப்படி, யார் களத்தில் முந்துகிறார்கள் என்பது குறித்து விவரிக்கும் பக்கம் தான் `முந்துவது யார்?’
இன்று நாம் பார்க்கப்போவது தஞ்சாவூர் மாவட்ட கள நிலவரம்.!
1. தஞ்சாவூர் சட்டமன்ற தொகுதி
தஞ்சாவூர் தொகுதியில் விவசாயம், கால்நடை வளர்ப்பு, தலையாட்டி பொம்மை, தஞ்சாவூர் ஓவியம், வீணை உள்ளிட்ட கலை பொருட்கள் தயாரித்தல் போன்றவை முக்கிய தொழில்கள். புகழ் மிக்க பெரிய கோயில் அமைந்திருப்பதால் சுற்றுலாத் தலமாகவும் திகழ்கிறது. தொகுதிக்குள் முக்குலத்தோர், பட்டியலினத்தவர், கிறிஸ்தவர், இஸ்லாமியர், வெள்ளாளர், யாதவர் உள்ளிட்ட பல மைனாரிட்டி சமூகத்தினரும் கலவையாக வசிக்கின்றனர்.
திமுக-வைச் சேர்ந்த டி.கே.ஜி.நீலமேகம் சிட்டிங் எம்.எல்.ஏ.

திமுகவை பொறுத்தவரை டி.கே.ஜி.நீலமேகம், மேயர் சண்.இராமநாதன், துணை மேயர் அஞ்சுகம் பூபதி, துரை.சுதாகர், எஸ்.எஸ்.ராஜ்குமார், எல்.ஜி.அண்ணா, செந்தமிழ்செல்வன், கரந்தை உதயநிதி, து.செல்வம், மணிமாறன் என சீட்டுக்கான ரேஸில் உள்ளவர்களின் லிஸ்ட் ரொம்பவே நீளம். திமுக கூட்டணியில் மூவேந்தர் முன்னேற்ற கழகமும் தொகுதியை குறி வைத்து கேட்கிறார்கள்.
அதிமுகவை பொறுத்தவரை மாநகரச் செயலாளர் என்.எஸ்.சரவணன் வேட்பாளர் என்பது உறுதியாகி விட்டதாக சொல்கிறார்கள். இவர் தொகுதிக்குள் 90 சதவீத பிரச்சார பணிகளை முடித்து விட்டதாகவும் பேசப்படுகிறது.
தவெக-வில் தலைமையுடன் நெருக்கமாக இருக்கும் தஞ்சாவூர் மத்திய மாவட்ட செயலாளர் சரவணன் தான் வேட்பாளர் என்கிறார்கள்.
நாம் தமிழர் கட்சி வேட்பாளர் புலவர் கிருஷ்ணகுமார் சத்தமில்லாமல் பிரச்சார பணிகளை மேற்கொண்டு வருகிறார்.

திமுகவிற்கு சாதகமாக உள்ள தொகுதிகளில் தஞ்சாவூரும் ஒன்று. தொகுதிக்குள் இருக்கும் சிறுபான்மையினர் வாக்குகள் பெரும்பாலும் திமுகவிற்கே சாதகமாக உள்ளது. கடந்த முறை வாக்குகளை பிரித்த அமமுக இம்முறை கூட்டணியில் இருப்பது அதிமுகவுக்கு பலம்.
தற்போதைய நிலவரப்படி தொகுதி திமுக-விற்கு சாதகமாக உள்ளது. திமுக-வில் வேட்பாளர் யார் என்பதும், இங்கு வலுவாக இருக்கும் தவெக பிரிக்கும் வாக்குகள் யாருக்கு லாபத்தை தரும் என்பதை பொறுத்து கடைசி நேரத்தில் முடிவுகள் மாறுவதற்கான சூழலும் நிலவுவதாக களம் இருக்கிறது.
2. ஒரத்தநாடு சட்டமன்ற தொகுதி
ஒரத்தநாடு தொகுதியில் விவசாயம், கால்நடை வளர்ப்பு போன்றவை முக்கிய தொழில்கள். தொகுதிக்குள் கள்ளர், முத்தரையர், பட்டியலினத்தவர் அடுத்தபடியாக யாதவர், உடையார் உள்ளிட்ட இதர சமூகத்தினரும் வசிக்கின்றனர்.
கடந்த தேர்தலில் தஞ்சாவூர் மாவட்டத்தில் அதிமுக இங்கு மட்டும் தான் வெற்றி பெற்றது. எம்.எல்.ஏ-வாக இருந்த வைத்திலிங்கம் திமுக-வில் ஐக்கியமாகி விட்டார். திமுக-வை பொறுத்தவரை வைத்திலிங்கத்திற்கு சீட் உறுதி என்கிறார்கள். எம்.இராமச்சந்திரன், மகேஷ் கிருஷ்ணசாமி, கலைமணி இளையபாரதி உள்ளிட்ட பலர் ரேஸில் உள்ளனர்.

அதிமுக-வை பொறுத்தமட்டில் மத்திய மாவட்ட செயலாளர் மா.சேகர் வேட்பாளர். தவெக-வை பொறுத்தவரை டாக்டர் அரவிந்த், சிங்கப்பூர் சுதாகர், ஒன்றிய செயலாளர் ரஜினி ஆகியோர் ரேஸில் உள்ளனர்.
நாம் தமிழர் கட்சியில் நடிகர் களவாணி திருமுருகன் வேட்பாளர். தொகுதிக்குள் திமுக மீதுள்ள ஊழல் குற்றச்சாட்டுகளை முன் வைத்து திருமுருகன் மேற்கொள்ளும் அனல் பறக்கும் பிரச்சாரம் ஹைலைட்.
வைட்டமின்களுக்கு பஞ்சமில்லாத வைத்திலிங்கம் வருகை திமுவிற்கு கூடுதல் பலத்தை கொடுத்துள்ளது. வேட்பாளராக அறிவிப்பதற்கு முன்பே தொகுதியில் பெரும்பாலான பணிகளை முடித்து விட்டார் வைத்தி. தேர்தல் வேலையில் எக்ஸ்பர்டானவர் கூடவே வைட்டமினையும் இறக்குவதால் ஒரத்தநாடு திமுக-விற்கு சாதகமாக உள்ளது.
3. பட்டுக்கோட்டை சட்டமன்ற தொகுதி
பட்டுக்கோட்டை தொகுதியில் தென்னை, நெல் விவசாயம், மீன்பிடி, போன்றவை முக்கியத் தொழில்கள். முக்குலத்தோர், முத்தரையர், வேளாளர், இஸ்லாமியர், பட்டியலினத்தவருக்கு அடுத்தபடியாக கோனார், நாடார் சமூகத்தினர் நிறைந்திருக்கின்றனர். திமுகவை சேர்ந்த அண்ணாதுரை சிட்டிங் எம்.எல்.ஏ.

திமுக-வை பொறுத்தவரை சூரப்பள்ளம் சொ.விஜயகுமார், பார்த்திபன், பழனிவேல், அண்ணாதுரை, பழஞ்சூர் செல்வம், மாளிக்காடு ரமேஷ் என பலர் ரேஸில் உள்ளனர்.
திமுக கூட்டணியில் காங்கிரஸ் தொகுதியை கேட்பதாகவும் மகேந்திரன் வேட்பாளராக களமிறங்குவார் என்கிறார்கள். அதிமுக-வில் முன்னாள் எம்.எல்.ஏ சி.வி.சேகர், கல்யாணஓடை செந்தில், எஸ்.டி.எஸ்.செல்வம் உள்ளிட்ட பலர் ரேஸில் உள்ளனர்.
அதிமுக கூட்டணியில் பாஜக தொகுதியை கேட்டு மல்லுகட்டுகின்றது. தவெக-வில் ஆதி.ராஜாராம், சிங்காரவேலு, மதன் சீட் எதிர்பார்த்துள்ளனர். நாம் தமிழர் கட்சியில் கண்ணன் வேட்பாளர்.
கணிசமாக இருக்கும் இஸ்லாமியர் வாக்குகள் சாதகமாக இருப்பதால் தற்போதைய நிலவரப்படி திமுக நேரடியாக போட்டியிட்டால் தொகுதியை கைபற்றுவதற்கான சூழல் நிலவுகிறது. காங்கிரஸ் கட்சிக்கு ஒதுக்கினால் மாற்றம் நிகழவும் வாய்ப்புள்ளது.!
4. பேராவூரணி சட்டமன்ற தொகுதி
பேராவூரணி தொகுதியில் தென்னை, மீன்பிடி, கூல்டிரிங்க்ஸ் பெட்டி தயாரித்தல் போன்றவை முக்கியத்தொழில்கள். மனோரா, புதுப்பட்டினம் பீச் போன்றவை அமைந்திருப்பதால் சுற்றுலாத் தளமாகவும் திகழ்கிறது. முத்தரையர், அகமுடையர், பட்டியலினத்தவர், இஸ்லாமியர், யாதவர் உள்ளிட்ட இதர சமூகத்தினரும் வசிக்கின்றனர்.
திமுக-வைச் சேர்ந்த அசோக்குமார் சிட்டிங் எம்.எல்.ஏ. திமுக-வை பொறுத்தவரை இந்த முறையும் இவருக்கே வாய்ப்பு வழங்கப்படுகிறது என்கிறார்கள். அருள்நம்பி, முத்துமாணிக்கம் உள்ளிட்டோர் ரேஸில் உள்ளனர். கூட்டணியில் கருணாஸ் மற்றும் தேமுதிகவும் தொகுதியை குறி வைத்துள்ளார்களாம்.

அதிமுக-வை பொறுத்தவரை கோவி.இளங்கோ, திருஞானசம்பந்தம், பில்லங்குழி செந்தில்குமார் ஆகியோர் ரேஸில் உள்ளனர். கோவி.இளங்கோவுக்கு தொகுதி உறுதி செய்யப்பட்டதாகவும் தேர்தல் பணிகளை செய்து வருவதாகவும் சொல்கிறார்கள். கூட்டணியில் பாஜகவும் தொகுதியை கேட்கிறதாம். தவெக-வில் அருள்முருகன், டெல்டா ராஜவிக்னேஷ், ராஜேந்திரன் என பலர் சீட்டுக்காக மெனக்கெடுகின்றனர். நாம் தமிழர் கட்சியில் புவனா என்பவர் வேட்பாளராக களமிறக்கப்பட்டுள்ளார்.
பேராவூரணியிலும் இஸ்லாமிய வாக்குகள் திமுக-விற்கு சாதகமாக இருக்கின்றன. தன்னார்வத்துடன் தவெக-வில் அதிகளவில் உறுப்பினர் ஆனவர்களின் பட்டியலில் பேராவூரணியும் ஒன்று என்பதை கவனிக்க வேண்டியுள்ளது.
திமுக அதிமுக நேரடியாக போட்டியிட்டால் இழுபறி நிலை ஏற்படுவதற்கு வாய்ப்புள்ளது என்கிறார்கள்.

5. திருவையாறு சட்டமன்ற தொகுதி
திருவையாறு தொகுதியின் வாழ்வாதாரமாக விவசாயம் உள்ளது. தொகுதிக்குள் கல்லணை அமைந்திருப்பதால் சுற்றுலாத் தளமாகவும் திகழ்கிறது. கள்ளர், பட்டியலினத்தவர், சிறுபான்மையினர், முத்தரையர், உடையார், மூப்பனார், வன்னியர் உள்ளிட்ட இதர சமூகத்தினரும் வசிக்கின்றனர். திமுக-வைச் சேர்ந்த துரை.சந்திரசேகரன் சிட்டிங் எம்.எல்.ஏ. திமுக-வை பொறுத்தவரை மீண்டும் துரை.சந்திரசேகரனுக்கு சீட் என்கிறார்கள். ஆனாலும் முகில் வேந்தன், கல்லணை செல்லக்கண்ணு உள்ளிட்டோர் ரேஸில் உள்ளனர். கூட்டணியில் மக்கள் நீதி மய்யம் இருந்தவரையில் அவர்கள் இந்த தொகுதியை கேட்பதாகவும், பாடலாசிரியர் சினேகன் வேட்பாளராக களமிறங்க வாய்ப்புள்ளது என்றும் பேச்சுகள் அடிப்பட்டது. இப்போது மநீம தேர்தல் ரேஸில் இருந்து விலகியுள்ளது குறிப்பிடத்தக்கது.
அதிமுக-வை பொறுத்தவரை ரெத்தினசாமி, தில்லைஸ்தானம் சூர்யபிரகாஷ் உள்ளிட்டோர் ரேஸில் உள்ளனர். கூட்டணியில் தொகுதி அமமுகவுக்கு செல்வது உறுதியாகியிருக்கிறது என்கிறார்கள். வேலு கார்த்திகேயன் வேட்பாளர் என்கிறார்கள்.
தவெக-வில் ராஜ்மோகன், மணிகண்டன் ஆகிய இருவரின் பெயர் அடிபடுகிறது. நாம் தமிழர் கட்சியில் செந்தில்நாதன் களமிறக்கப்பட்டுள்ளார். கடந்த தேர்தலில் அமமுக தனித்து போட்டியிட்ட நிலையில் வேலுகார்த்திகேயன் 37,000 வாக்குகள் பெற்றார். தற்போது அதிமுக கூட்டணியில் இணைந்து களம் காண்பதால் நம்பிக்கை ஏற்பட்டுள்ளது. இஸ்லாமிய வாக்குகள் சாதகமாக இருப்பதால் தற்போதைய நிலவரப்படி திமுக முந்துவதற்கு வாய்ப்புள்ளது.

6. பாபநாசம் சட்டமன்ற தொகுதி
பாபநாசம் தொகுதியில் விவசாயம், ஐம்பொன் சிலை தயாரித்தல் போன்றவை முக்கிய தொழில்கள். சுவாமிமலை முருகன் கோயில் அமைந்திருப்பதால் சுற்றுலாத்தளமாக திகழ்கிறது. பட்டியலினத்தவர், வன்னியர், முக்குலத்தோர், இஸ்லாமியர், மூப்பனார், முத்தரையர், உடையார், உள்ளிட்ட இதர சமூகத்தினரும் வசிக்கின்றனர்.
தி.மு.க கூட்டணியில் மனித நேய மக்கள் கட்சியின் பேராசிரியர் ஜவாஹிருல்லா சிட்டிங் எம்.எல்.ஏ. திமுக-வை பொறுத்தவரை எஸ்.கே.முத்துசெல்வம், அய்யாராசு, அம்மாப்பேட்டை கலைச்செல்வன், தாமரைச்செல்வன், பாவை ஹனிபா ஆகியோர் சீட் கேட்கிறார்கள். இந்த முறையும் ஜவாஹிருல்லா கேட்பதால் அக்கட்சிக்கு கிட்டதட்ட தொகுதி உறுதி என்றே சொல்கிறார்கள்.
அதிமுக-வில் முன்னாள் அமைச்சர் மறைந்த துரைக்கண்ணு மகன் அய்யபன்னுக்கு சீட் உறுதி என்கிறார்கள். கூட்டணியில் அமமுகவும் தொகுதியை கேட்கின்றனர். தவெக-வில் வைட்டமினுக்கு பஞ்சமில்லாத அசாருதீன் வேட்பாளர் என்கிறார்கள்.
நாம் தமிழர் கட்சியில் அனீஸ் பாத்திமா வேட்பாளர். தொகுதிக்குள் வெற்றி தோல்வியை தீர்மானிக்கும் இஸ்லாமியர் வாக்குகள் சாதகமாக இருப்பது திமுக-வின் பலம். இந்த முறை திமுக நேரடியாக போட்டியிட்டால் வெற்றி வாகை சூடுவதற்கு வாய்ப்புகள் அதிகம். கூட்டணிக்கு ஒதுக்கினால் இழுபறி நிலை ஏற்படலாம்.!

7. கும்பகோணம் சட்டமன்ற தொகுதி
கும்பகோணம் தொகுதியில் விவசாயம், நெசவு உற்பத்தி, பித்தளை பாத்திரம் தயாரித்தல் போன்றவை முக்கியத் தொழில்கள். கோயில்கள் நிறைந்திருப்பதால் சுற்றுலாத்தளமாகவும் திகழ்கிறது. தொகுதிக்குள் வன்னியர், பட்டியலினத்தவர், செளராஷ்டிரா, பிராமணர், இஸ்லாமியர், முக்குலத்தோர் உள்ளிட்ட இதர சமூகத்தினரும் வசிக்கின்றனர்.
தி.மு.க-வைச் சேர்ந்த சாக்கோட்டை க.அன்பழகன் சிட்டிங் எம்.எல்.ஏ. திமுக-வை பொறுத்தவரை இந்த முறையும் சாக்கோட்டை க.அன்பழகனுக்கு சீட் உறுதி.
அதிமுக-வில் ரத்னா சேகர், இராமநாதன், பாரதிமோகன் ஆகியோர் ரேஸில் உள்ளனர். கூட்டணியில் த.மா.கா மற்றும் பாஜக தொகுதியை கேட்கின்றனர். தவெக-வில் மாவட்ட செயலாளர் வினோத் வேட்பாளர் என்கிறார்கள். நாம் தமிழரில் ஆனந்த் வேட்பாளர்.
கும்பகோணம் தனி மாவட்டமாக அறிவிக்காதது தி.மு.க மீது அதிருத்தியை ஏற்படுத்தியுள்ளது. இஸ்லாமியர், கிறிஸ்துவர் வாக்குகள், சாக்கோட்டை க.அன்பழகன் தனிப்பட்ட செல்வாக்கு போன்றவற்றால் திமுக கைப்பற்றும் நிலையே தற்போது உள்ளது.

8. திருவிடைமருதூர் – தனி சட்டமன்ற தொகுதி
திருவிடைமருதூர் தனி தொகுதியில் விவசாயம், திருபுவனம் பட்டு, நாச்சாச்சியார் கோயில் குத்து விளக்கு, பித்தளை பாத்திரங்கள் தயாரித்தல் போன்றவை முக்கிய தொழில்கள். திருவிடைமருதூர் மகாலிங்க சுவாமி, திருநாகேஸ்வரம், உப்பிலியப்பன், கஞ்சனூர், சூரியனார் கோயில் உள்ளிட்ட பல பிரசித்தி பெற்ற கோயில்கள் அமைந்திருப்பதால் சுற்றுலாத்தளமாகவும் திகழ்கிறது.
வன்னியர், பட்டியலினத்தவர், இஸ்லாமியர், கிறிஸ்தவர், முக்குலத்தோர் உள்ளிட்ட இதர சமூகத்தினரும் வசிக்கின்றனர். அமைச்சர் கோவி.செழியன் வசம் தொகுதி உள்ளது. திமுக-வை பொறுத்தவரை இந்த முறையும் கோவி.செழியன் வேட்பாளர். தேர்தல் பணிகளை சத்தமில்லாமல் தொடங்கி விட்டார்.

அதிமுக-வில் திருவிடைமருதூர் வடக்கு ஒன்றிய இளைஞரணி செயலாளர் ராஜகுமாரன், கஞ்சனூர் முருகன், எழில்செல்வன், யூனியன் வீரமணி உள்ளிட்டோர் ரேஸில் உள்ளனர்.
தவெக-வில் பிரபாகரனுக்கு வாய்ப்புள்ளதாக சொல்கிறார்கள். நாம் தமிழர் கட்சி வேட்பாளர் திவ்யபாரதி. பாஜக எதிர்பால் சிறுபான்மையினர் வாக்குகள் திமுக-விற்கு சாதகமாக இருக்கிறது.
அதிமுக கூட்டணியில் உள்ள பா.ம.க-வில் நிலவும் பிளவும் திமுகவிற்கு ப்ளஸாக அமைய வாய்ப்புள்ளது. தற்போதைய நில்வரப்படி தொகுதியை திமுக தக்க வைத்து கொள்வதற்கான வாய்ப்புள்ளது.