காங்கிரஸ் கட்சி, யாருடன் கூட்டணி வைப்பது என்கிற குழப்பத்திற்கு தீர்வு காண, டெல்லியில் அவசர ஆலோசனை கூட்டம் நடந்துள்ளது. தி.மு.க-வுடன் கூட்டணியை தொடர்ந்தால் தமிழக நிர்வாகத்தில் எந்த மாற்றமும் இருக்காது என்றும், கூட்டணி மாற்றம் என்றால் தலைமையிலும் மாற்றம் இருக்கும் என்கிற தகவலும் கசிய ஆரம்பித்துள்ளது.
தமிழக காங்கிரஸ் கட்சி தி.மு.கவுடன் கூட்டணி பேச்சுவார்த்தை நடத்த காத்துள்ளது. இன்று காங்கிரஸ் மேலிட பொறுப்பாளர் கிரிஷ் ஜோடங்கர் சென்னை வந்து கூட்டணி பேச்சுவார்த்தையை துவக்குவார் என்று நேற்று காங்கிரஸ் கட்சி தரப்பில் சொல்லப்பட்டது. ஆனால் இன்று காலையிலிருந்து கிரிஷ் ஜோடாங்கர் வருவது குறித்து எந்த தகவலும் காங்கிரஸ் கட்சி தரப்பில் இல்லை. இந்நி்லையில் 28-ம் தேதி சனிக்கிழமை அன்று தி.மு.க -வுடன் பேச்சுவார்த்தையை காங்கிரஸ் கட்சி முன்னெடுக்கும் என்று தகவல் வெளியானது.

ஆனால் இந்த தகவலையும் காங்கிரஸ் மற்றும் தி.மு.க என இரண்டு கட்சிகளும் அதிகார பூர்வமாக தெரிவிக்கவில்லை. மற்றொரு புறம் காங்கிரஸ் தரப்பு த.வெ.க-வுடன் பேச்சுவார்த்தை நடத்திவருவதாகவும் சொல்லபட்டது. இப்படி பல்வேறு செய்திகள் காங்கிரஸ் சுற்றி எழுந்துவரும் நிலையில்,டெல்லியில் இன்று காலை முக்கிய ஆலோசனை ஒன்று நடந்துள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளது.
காங்கிரஸ் பொதுச்செயலாளர் வேணுகோபால், மற்றும் ராகுல் காந்தி ஆகிய இருவரும் தற்போது கேரளாவில் உள்ளார்கள். இவர்கள் இருவரும் இன்று காலை டெல்லி சென்றுள்ளார்கள். டெல்லியில் அகில இந்திய காங்கிரஸ் தலைவர் கார்கேவுடன் இவர்கள் ஆலோசனை செய்துள்ளார்கள்.