ஓ.பன்னீர் செல்வம் அணியின் ஆதரவாளர் வைத்திலிங்கத்தை சசிகலா மற்றும் அவரின் சகோதரர் திவாகரன் மற்றும் டி.டி.வி. தினகரன் ஆகியோர் சந்தித்துப் பேசினர்.
ஒரத்தநாட்டில் வைத்திலிங்கத்தின் உடல்நிலை குறித்து விசாரித்த நிலையில், இந்த சந்திப்பு அனைத்தும் கலந்ததாக இருந்ததாக சசிகலா குறிப்பிட்டுள்ளார்.
தஞ்சை மாவட்டம் ஒரத்தநாட்டில் ஓ. பன்னீர் செல்வம் அணியின் ஆதரவாளர் வைத்திலிங்கத்தை சசிகலா மற்றும் அவரின் சகோதரர் திவாகரன், அமமுக பொதுச்செயலாளர் டி.டி.வி. தினகரன் ஆகிய மூவரும் சந்தித்து நலம் விசாரித்தனர்.
பின்னர் செய்தியாளர்களுடன் சசிகலா பேசியதாவது,
”அதிமுக ஏழை மக்களுக்கான கட்சி. தலைவர் (எம்.ஜி.ஆர்.) ஆரம்பித்தது. அதுவும் மக்களுக்காக ஆரம்பித்தது. திமுக போன்று அல்ல நாங்கள். எங்கள் நிறுவனத் தலைவரே மக்களாட்சி என்றுதான் குறிப்பிட்டார். அதே வழியைத்தான் புரட்சித் தலைவி ஜெயலலிதாவும் பின்பற்றினார்.
2026-ல் எல்லோரும் ஒன்றிணைந்து நல்ல ஆட்சியை நாங்கள் தருவோம். அது மக்களுக்கானதாக இருக்கும்” என்றார்.
அதிமுக இணைய வாய்ப்பில்லை என எடப்பாடி பழனிசாமி கூறியதற்கு பதிலளித்த சசிகலா,
”அனைவரும் ஒன்றிணைய முடியாது என்பதை தனியொரு நபர் முடிவு செய்ய முடியாது. அடிமட்டத் தொண்டர்கள் முடிவு செய்ய வேண்டும். அதுவே கட்சியின் விதிப்படி நடக்கும்” எனக் குறிப்பிட்டார்.
இதனைத் தொடர்ந்து பேசிய டி.டி.வி. தினகரன்,
”எடப்பாடி பழனிசாமியிடம் இரட்டை இலை சின்னம் இருந்தால் அதிமுகவுக்கு மூடு விழா நடத்திவிடுவார். எடப்பாடியிடம் உள்ள அதிமுக தொண்டர்கள் விழித்துக்கொள்ள வேண்டும். தேர்தலுக்குப் பிறகு அதிமுகவை மீட்க வேண்டிய பொறுப்பு எங்களிடம் வரும்” எனக் குறிப்பிட்டார்.