டெல்லியில் மதுபான கொள்கை விவகாரத்தில் ஆம்ஆத்மி ஆட்சிக்கும், முதல்&அமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவாலுக்கும் கடும் நெருக்கடி ஏற்பட்டு உள்ளது. இந்த வழக்கில் அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்ட கெஜ்ரிவால் நிபந்தனை ஜாமீனில் தற்போது திகார் சிறையில் இருந்து வெளியே வந்து பாராளுமன்ற தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டு வருகிறார்.
ஸ்வாதி மலிவால் எம்.பி.
இதற்கிடையே கெஜ்ரிவாலை சந்திக்க ஆம் ஆத்மி மாநிலங்களவை எம்.பி. ஸ்வாதி மலிவால் கடந்த 13-ம் தேதி டெல்லியில் உள்ள அவரது வீட்டுக்கு சென்றபோது கெஜ்ரிவாலின் தனி செயலர் பிபவ் குமார், ஸ்வாதி மலிவாலை தாக்கியதாக கூறப்படுகிறது.
இந்த விவகாரம் பூதாகரமாக வெடித்து உள்ளது.இது மீண்டும் அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு நெருக்கடியை ஏற்படுத்தி உள்ளது. இது தொடர்பாக டெல்லி போலீஸார் நேற்று முன்தினம் ஸ்வாதியின் வீட்டுக்குச் சென்று விசாரணை நடத்தினர். பின்னர் டெல்லி சிவில் லைன் காவல் நிலையத்தில் ஸ்வாதி எழுத்துபூர்வமாக புகார் கொடுத்தார்.
தாக்குதல்
அதில், “கடந்த 13-ம் தேதி அரவிந்த் கெஜ்ரிவால் வீட்டுக்கு சென்றபோது அங்கிருந்த கெஜ்ரிவாலின் தனி செயலர் பிபவ் குமார் என்னை தகாத வார்த்தைகளால் திட்டி கன்னத்தில் பலமுறை ஓங்கி அறைந்தார். என்னை தரையில் இழுத்து தள்ளினார். இதில் எனது ஆடைகள் அலங்கோலமாகின. எனது மார்பிலும், வயிற்றிலும் அவர் எட்டி உதைத்தார்” என்று கூறியிருந்தார்.
இதையடுத்து கொலை மிரட்டல், மானபங்கம், தாக்குதல், அவதூறாக பேசுதல் உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளில் பிபவ் குமார் மீது போலீசார் வழக்கு பதிவு செய்தனர்.
கைது
இதைத்தொடர்ந்து தற்போது பிபவ் குமாரை டெல்லி போலீசார் அதிரடியாக கைது செய்துள்ளனர். அவரை போலீஸ் நிலையத்துக்கு கொண்டுவந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
இதற்கிடையே கெஜ்ரிவால் வீட்டில் ஸ்வாதி மலிவாலிலுடன் நடைபெற்ற உரையாடல் மற்றும் அவர் வீட்டில் இருந்து வெளியே செல்லும் புதிய வீடியோ காட்சிகள் தற்போது வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.