கேரள மாநில சாலைப் போக்குவரத்துத் துறை அமைச்சர் கே.பி. கணேஷ் குமார் மீது அவரது மனைவி பிந்து மேனன் நேற்று சில குற்றச்சாட்டுகளை முன்வைத்தார்.
வாலகத்தில் உள்ள குடும்ப வீட்டுக்குக் கடந்த 7-ம் தேதி சென்றபோது அங்கு கே.பி. கணேஷ் குமாரை மற்றொரு பெண்ணுடன் யாரும் பார்க்கக்கூடாத மோசமான நிலையில் பார்த்ததாகவும், அதைத் தனது செல்போனில் போட்டோ எடுத்தபோது அவரது ஊழியர் ஒருவர் தடுத்து நிறுத்தும் விதமாகக் கதவை அடைக்க முயன்றதாகவும், மற்றொருவர் செல்போனைப் பறிக்க முயன்றதாகவும் கூறியிருந்தார்.
கே.பி. கணேஷ் குமாரின் டிரைவர் அந்தப் பெண்ணை அங்கிருந்து காரில் அழைத்துச் சென்றுவிட்டதாகவும், அங்கிருந்தபடியே உறவினரான முன்னாள் டி.ஜி.பி-யான ஸ்ரீலேகாவை அழைத்து, அவரது ஆலோசனைப்படி காவல்துறையின் 112 என்ற கட்டணமில்லா எண்ணுக்கு அழைத்ததாகவும் தெரிவித்திருந்தார்.
ஆனால், போலீஸார் அங்கு சென்றபோது கே.பி. கணேஷ் குமாரின் ஊழியர்கள் வீட்டுக்குள் அனுமதிக்கவில்லை. இது குடும்பப் பிரச்னை என்பதால் அதில் தலையிட முடியாது எனக் கூறி போலீஸார் சென்றுவிட்டதாகவும் பிந்து மேனன் குற்றம் சாட்டியிருந்தார்.

இதுபற்றிக் கருத்து தெரிவித்த அமைச்சர் கே.பி. கணேஷ் குமார், “எனது அரசியலைத்தான் நீங்கள் பார்க்க வேண்டும். மக்கள் பிரதிநிதி மக்களுக்கு என்னவெல்லாம் செய்கிறார், அதனால் கேரளாவுக்கு என்ன நன்மை நடந்தது என்பதைத்தான் நீங்கள் பார்க்க வேண்டும்.
கணேஷ் குமாருக்கு ஒன்றல்ல ஐந்தாயிரம் காதல் உண்டு. காதல் இல்லாதவன் ஒன்றுக்கும் லாயக்கில்லாதவன். எனது தனிப்பட்ட விஷயத்தில் யாரும் தலையிட வேண்டாம்” எனக் கூறியிருந்தார்.