இதற்கிடையே தேர்தல் ஆணையத்துக்கும் பா.ஜ.க-வுக்கும் தொடர்பு உள்ளதாக சமூக வலைத்தளங்களில் பதிவுகள் வலம் வந்தன. தேர்தல் ஆணையத்தைச் சந்தேகிக்கும் வகையில் சமூக வலைத்தளங்களில் பதிவிட வேண்டாம் எனக் கேரள மாநில தேர்தல் அதிகாரி தெரிவித்திருந்தார்.
இந்த நிலையில் தேர்தல் ஆணையம் குறித்து பதிவிட்டவர்களுக்கு காவல்துறையின் சைபர் கிரைம் பிரிவு மூலம் நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது. அந்தப் பதிவுகளை நீக்க வேண்டும் எனவும் நோட்டீசில் அறிவுறுத்தப்பட்டு உள்ளது.

தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு மற்றும் காவல் துறையின் நடவடிக்கை குறித்து முதல்வர் பினராயி விஜயனிடம் நேற்று செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர்.
அதற்கு பதிலளித்த பினராயி விஜயன், “மத்தியில் ஆளும் பா.ஜ.க முத்திரையுடன் மற்ற அரசியல் கட்சிகளுக்கு சுற்றறிக்கை அனுப்பப்பட்டுள்ளது. இதை ஒரு அதிகாரியின் தவறு என்று சாதாரணமாகக் கருத முடியாது.
தேர்தல் ஆணைய அதிகாரிகளின் நடவடிக்கைகளில் முழுமையான அரசியல் நடுநிலைமை பிரதிபலிக்க வேண்டும். உயர் அதிகாரிகள் சரிபார்க்காமல் இதுபோன்ற முக்கியத் தகவல்களை அனுப்புவதை, ஒரு சாதாரணத் தவறு என்றோ, எதிர்பாராத குறைபாடு என்றோ புறக்கணிக்க முடியாது.
இந்த விவகாரம் குறித்து விசாரணை நடத்தப்படும் என்று கேரள தலைமைத் தேர்தல் அதிகாரி தெரிவித்துள்ளார். விசாரணையின் முடிவுகளை அரசியல் கட்சிகளுக்கும் பொதுமக்களுக்கும் தெரிவிக்க வேண்டும். இதுபற்றி தலைமை தேர்தல் அதிகாரிக்கு கடிதம் எழுத்தியுள்ளேன். நான் இப்போது சாதாரண குடிமகன்தான்.
காவல் துறை இப்போது எனது கட்டுப்பாட்டில் இல்லை. அதனால், தேர்தல் ஆணையத்தின் கோரிக்கையின் பேரிலேயே சமூக வலைத்தளங்களில் பதிவிட்டவர்களுக்கு காவல்துறை நோட்டீஸ் அனுப்பியதாகக் கருதுகிறேன். ஒரு ஜனநாயக நாட்டில், இதுபோன்ற சம்பவங்களுக்கு பொதுமக்களிடமிருந்து கருத்துகளும் விமர்சனங்களும் ஏற்படுவது இயல்புதான்.
அந்த விமர்சனங்கள் கண்ணியத்தின் எல்லைகளை மீறாமலும், அவதூறாக மாறாமலும், தனிப்பட்ட தாக்குதலாகவும் மாறாமல் இருக்கும் வரை அவை கருத்து வெளிப்பாடுகளாகவே கருதப்பட வேண்டும்” என்றார்.