கேரள மாநிலத்தில் சட்டமன்றத் தேர்தல் விரைவில் நடக்க உள்ளது. தலைநகரான திருவனந்தபுரத்தில் போட்டியிட சி.பி.எம், காங்கிரஸ் மற்றும் பா.ஜ.க முக்கிய தலைவர்கள் முண்டியடிக்கும் நிலை உள்ளது.
கேரளாவில் 10 ஆண்டுகளாக எதிர்க்கட்சியாக இருக்கும் காங்கிரஸுக்கு இந்தத் தேர்தலில் வென்றே ஆகவேண்டும் என்ற முனைப்பு ஏற்பட்டுள்ளது. இந்தியாவில் கேரளாவில் மட்டுமே ஆட்சியில் இருக்கும் சி.பி.எம் அந்தத் தகுதியை நிலைநிறுத்தும் வகையில், 3-வது முறையாக ஆட்சியைப் பிடிக்க வேண்டும் என்ற கடும் முயற்சியில் உள்ளது.
பா.ஜ.க இம்முறை கணிசமான தொகுதிகளைக் கைப்பற்ற வேண்டும் என்ற நோக்கத்தில் களத்தில் உள்ளது. பா.ஜ.க மாநிலத் தலைவர் ராஜீவ் சந்திரசேகர் நாடாளுமன்றத் தேர்தலின்போது திருவனந்தபுரம் தொகுதியில் போட்டியிட்டு தோல்வியடைந்தார்.
அவரை எதிர்த்துப் போட்டியிட்ட காங்கிரஸ் வேட்பாளர் சசிதரூர் வென்றார். வரும் சட்டமன்றத் தேர்தலும் சசிதரூருக்கும், ராஜீவ் சந்திரசேகருக்கும் நேரடியாக மோதல் ஏற்படும் நிலை உள்ளது. திருவனந்தபுரம், கோவளம், காட்டாக்கடை தொகுதிகளை மூன்று பக்க எல்லையாகவும், ஒருபுறம் கடலை எல்லையாகவும் கொண்டது நேமம் தொகுதி.
இங்கு சி.பி.எம், சி.பி.ஐ, காங்கிரஸ் கட்சிகள் வென்றுள்ளன. 2016 சட்டமன்றத் தேர்தலில் பா.ஜ.க-வைச் சேர்ந்த ஓ.ராஜகோபால் வென்று கேரளாவின் முதல் பா.ஜ.க எம்.எல்.ஏ என்ற புகழைப் பெற்றார்.

2016 சட்டமன்றத் தேர்தலில் சி.பி.எம் வேட்பாளர் வி.சிவன்குட்டி இரண்டாவது இடத்தைப் பிடித்திருந்தார். 2021 தேர்தலில் சி.பி.எம் கட்சியைச் சேர்ந்த வி.சிவன்குட்டி நேமம் தொகுதி எம்.எல்.ஏ-வாக வென்று தற்போது கல்வித்துறை அமைச்சராகவும் உள்ளார்.