மத்திய சமூகநீதி மற்றும் அதிகாரம் அளித்தல் துறை அமைச்சராக ராம்தாஸ் அத்வாலே உள்ளார். இவர் தலைவராக உள்ள ரீபப்ளிகன் பார்ட்டி ஆஃப் இந்தியா கட்சி, பா.ஜ.க தலைமையிலான என்.டி.ஏ கூட்டணியில் உள்ளது.
ரீபப்ளிகன் பார்ட்டி ஆஃப் இந்தியா கட்சியின் மாநில மாநாட்டில் கலந்துகொள்வதற்காக மத்திய அமைச்சர் ராம்தாஸ் அத்வாலே நேற்று கேரள மாநிலம் கண்ணூருக்குச் சென்றார்.
அப்போது செய்தியாளர்களைச் சந்தித்த அவர் கூறுகையில், “கேரளாவில் வளர்ச்சி ஏற்பட வேண்டுமானால் பினராயி விஜயன் பா.ஜ.க கூட்டணியில் இணைய வேண்டும். கேரளாவில் நடைபெற உள்ள சட்டசபைத் தேர்தலில் பா.ஜ.க தலைமையிலான என்.டி.ஏ கூட்டணியுடன் சேர்ந்து நின்றால் பினராயி விஜயன் மீண்டும் ஆட்சிக்கு வரலாம்.
கேரளாவின் வளர்ச்சிக்காகத் தாராளமாக மத்திய அரசிடம் இருந்து நிதியைப் பெறலாம். விவசாயம், வேலைவாய்ப்பு மற்றும் தொழில்துறையில் பெரிய பாய்ச்சலை கேரளா அடைய முடியும்.

தேசிய ஜனநாயகக் கூட்டணியில் சேருவதால் நீங்கள் பா.ஜ.க-வாக ஆகிவிடமாட்டீர்கள். பல கட்சிகள் தேசிய ஜனநாயகக் கூட்டணியில் இணைகின்றன. கம்யூனிஸ்ட் கட்சி, பா.ஜ.க-வை எதிர்க்கலாம், ஆனால் வளர்ச்சியை எதிர்க்கக் கூடாது.