கேரளா ஸ்டோரி 2″ திரைப்படத்திற்கு வழங்கப்பட்ட தணிக்கைச் சான்றிதழை எதிர்த்துத் தொடரப்பட்ட வழக்கில், கேரளா உயர்நீதிமன்றம் இன்று முக்கியக் கேள்விகளை எழுப்பியுள்ளது. திரைப்படத்தின் ட்ரெய்லர் ஒரு குறிப்பிட்ட சமூகத்தினரைத் தவறாகச் சித்தரிப்பதாகவும், மதக் கலவரத்தைத் தூண்டும் வகையில் உள்ளதாகவும் கூறி தொடரப்பட்ட மூன்று பொதுநல வழக்குகளை நீதிபதி பெச்சு குரியன் தாமஸ் விசாரித்தார்.
விசாரணையின் போது நீதிபதி, “கேரளா ஒரு மதச்சார்பற்ற மாநிலம்; இங்கு மக்கள் ஒற்றுமையாக வாழ்கிறார்கள். ஆனால், ஒட்டுமொத்த மாநிலத்திலும் ஏதோ அசம்பாவிதம் நடப்பது போன்ற பிம்பத்தை உருவாக்குவது தேவையற்ற உணர்ச்சிகளைத் தூண்டும். இதை தணிக்கை வாரியம் கவனிக்கவில்லையா?” என்று கேள்வி எழுப்பினார். மேலும், படத்தின் தலைப்பிலேயே மாநிலத்தின் பெயர் இடம் பெற்றிருப்பதால், மக்களின் அச்சத்தைப் புறக்கணிக்க முடியாது என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.
மனுதாரர் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், படத்தில் காட்டப்படும் சம்பவங்கள் மத்தியப் பிரதேசம் மற்றும் ராஜஸ்தான் மாநிலங்களைச் சார்ந்தவையாக இருந்தாலும், ‘கேரளா’ என்ற பெயரில் சித்தரிப்பது தவறானது என்று வாதாடினார். இதற்குப் பதிலளித்த படக்குழுவினர், டீசரில் உள்ள சில காட்சிகள் திரைப்படத்தில் இடம் பெறவில்லை என்று விளக்கம் அளித்தனர்.
கலைச் சுதந்திரத்தில் பொதுவாகத் தலையிட விரும்பவில்லை என்று குறிப்பிட்ட நீதிபதி, அதே சமயம் பொது அமைதிக்குக் குந்தகம் விளைவிக்கும் வகையில் படம் உள்ளதா என்பதை உறுதிப்படுத்த வேண்டியது அவசியம் என்றார். அதன் அடிப்படையில், நாளை (பிப்ரவரி 25) நீதிபதிகள் முன்னிலையில் இப்படத்தைச் சிறப்புத் திரையிடல் செய்ய அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளார். அதன் பின்னரே தணிக்கைச் சான்றிதழ் குறித்த இறுதி முடிவு எடுக்கப்படும் எனத் தெரிகிறது.
