மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மற்றும் அவரின் தோழி சசிகலா ஆகியோருக்குச் சொந்தமான கொடநாடு எஸ்டேட் பங்களாவில் 2017- ம் ஆண்டு ஏப்ரல் 23- ம் தேதி நள்ளிரவு கொலை, கொள்ளை சம்பவம் நடைபெற்றது. அது தொடர்பான வழக்கு விசாரணை,

நீலகிரி மாவட்டம், ஊட்டியில் உள்ள மாவட்ட நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது.
இன்று காலை நடைபெற்ற வழக்கு விசாரணையின்போது, வழக்கை விசாரித்த நீதிபதி முரளிதரன், “இந்த வழக்கை இன்னும் முடிக்காமல் இருப்பது ஏன்?” என சி.பி.சி.ஐ.டி தரப்பிடம் கேள்வி எழுப்பினார்.
இதற்கு பதில் அளித்த சி.பி.சி.ஐ.டி தரப்பு அதிகாரிகள், “இந்த வழக்கு விசாரணை சி.பி.சி.ஐ.டி தரப்புக்கு மாற்றப்பட்டதில் இருந்து தற்போது வரை 269 சாட்சிகளிடம் விசாரணை நடத்தப்பட்டு, அந்த தகவல்கள் வாக்குமூலங்களாகப் பெறப்பட்டுள்ளன.

மேலும், சம்பவம் நடைபெற்ற சமயத்தில் சந்தேகப்படும்படியான நபர்களின் செல்போன் உரையாடல்கள் குறித்த தரவுகள் தேவைப்படுகின்றன. குஜராத்தில் உள்ள மத்திய அரசின் ஆய்வகத்தில் இருந்து ஒலி நாடாக்கள் தொடர்பான ஆய்வு முடிவுகள் வர வேண்டியுள்ளன. அவை கிடைக்கப்பெற்றதும் வழக்கு அடுத்தக்கட்டத்திற்கு நகரும்” எனத் தெரிவித்துள்ளனர்.