கொடைக்கானல்: பராமரிப்பு பணிக்காக கொடைக்கானலில் உள்ள மன்னவனூர் ஆட்டுப் பண்ணை இன்றும் (செப்.6), நாளையும் (செப்.7) மூடப்படுவதால், சுற்றுலா பயணிகளுக்கு அனுமதி இல்லை என அறிவிக்கப்பட்டுள்ளது.
திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல் மேம்மலை கிராமமான மன்னவனுாரில் மத்திய அரசின் செம்மறி ஆடு மற்றும் ரோம உற்பத்தி தென்மண்டல ஆராய்ச்சி நிலையம் செயல்படுகிறது. இங்கு ரோம உற்பத்திக்காக நூற்றுக்கணக்கான செம்மறி ஆடுகள் வளர்க்கப்படுகின்றன. அதே போல், வளர்ப்பு முயல்கள் இன விருத்தியும் செய்யப்படுகிறது. அதற்காக, ஒயிட் ஜெயன்ட், சோவியத் சிஞ்சில்லா, நியூசிலாந்து ஒயிட், டச், கிரே ஜெயன்ட், பிளாக் பிரவுன் வகையான முயல்கள் வளர்க்கப்படுகிறது.
இங்கு வரும் சுற்றுலா பயணிகள் செம்மறி ஆட்டு பண்ணையை பார்வையிட்டு, முயல்களையும் விலைக்கு வாங்கி செல்கின்றனர். விடுமுறை நாட்களில் தமிழகம் மட்டுமின்றி வெளி மாநிலங்களில் இருந்தும் அதிகளவில் சுற்றுலா பயணிகள் வந்து செல்கின்றனர்.
இந்நிலையில் பராமரிப்பு பணி காரணமாக இன்றும் (செப்.6), நாளையும் (செப்.7) ஆட்டுப் பண்னை சூழலியல் சுற்றுலா மையம் மூடப்படுகிறது. அதனால் சுற்றுலா பயணிகளுக்கு அனுமதி இல்லை என ஆராய்ச்சி மைய விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.