பழங்குடியின மக்கள் மற்றும் நாடோடிச் சமூகத்தைச் சேர்ந்தவர்கள் கொத்தடிமைத்தனத்தால் அதிகம் பாதிக்கப்படுவதற்கு முக்கிய காரணம், வறுமைதான். ஒரு வேளை உணவுக்கே சிரமப்படும் நிலையை சிலர் பயன்படுத்திக் கொண்டு அவர்களை சுரண்டுகின்றனர். கல்வி மற்றும் சமூக விழிப்புணர்வு குறைவாக இருப்பதும் இதற்கு ஒரு காரணமாக உள்ளது.
கொத்தடிமை தொழிலாளர்களை மீட்டு உடனடி மறுவாழ்வு அளிப்பது அரசாங்கத்திற்கு பெரிய சவாலாகவே உள்ளது. மீட்கப்படும் தொழிலாளர்கள் உடல்ரீதியாகவும், மனரீதியாகவும் பாதிக்கப்பட்ட நிலையில் இருப்பதால், முழுமையாக மீள ஓர் ஆண்டு இரண்டு ஆண்டுகள் என நீண்ட காலம் தேவைப்படுகிறது. தற்போது அரசாங்கம் நிதி உதவி மற்றும் நலத்திட்டங்களை வழங்கினாலும், ஒருவரை நீண்ட காலம் தொடர்ந்து கவனித்து மீளமைக்கும் அமைப்பு இன்னும் போதுமான அளவில் உருவாகவில்லை.
இந்த நோக்கில் மாவட்ட சட்ட சேவை ஆணையம் மற்றும் கண்காணிப்பு குழுக்கள் இணைந்து கொத்தடிமை தொழிலாளர்களுக்கான மறுவாழ்வு அமைப்புகளை உருவாக்கும் முயற்சிகளை தொடங்கியுள்ளன. இது இன்னும் வலுப்படுத்தப்பட வேண்டிய நிலையில் உள்ளது.

குறைந்தபட்ச தண்டனை – சட்டத்தில் இருக்கும் குறை!
சட்டம் இருந்தும் கொத்தடிமை நடைமுறை தொடருவதற்கு, குறைந்த தண்டனை ஒரு முக்கிய காரணமாக உள்ளது. கொத்தடிமை ஒழிப்புச் சட்டத்தின் கீழ் அதிகபட்சமாக மூன்று ஆண்டுகள் மட்டுமே தண்டனை விதிக்கப்படுவதால், குற்றவாளிகளுக்கு பயம் ஏற்படுவதில்லை. இதனை மனித வணிகக் குற்றமாகக் கருதி, சட்டத்தை மேலும் கடுமையாக்க வேண்டிய தேவை உள்ளது.
இன்றைய சூழலில் பழங்குடியினர்கள் மட்டுமல்லாமல், வட மாநிலங்களிலிருந்து வரும் புலம்பெயர் தொழிலாளர்களும் உழைப்புச் சுரண்டலுக்கு உள்ளாகி வருகின்றனர். குறைந்த ஊதியம், குறைந்தபட்ச ஊதிய சட்டம் மீறல் ஆகியவை இதற்கான முக்கிய காரணங்களாக உள்ளன. இதனை கொத்தடிமை, மனித வணிகம் மற்றும் புலம்பெயர் தொழிலாளர் பிரச்னை என்ற ஒருங்கிணைந்த பார்வையில் அணுகினால் மட்டுமே இதைத் திறம்படத் தடுக்க முடியும். கொத்தடிமை தொடர்பான புகார்களுக்கு இலவச தொலைபேசி எண்களும் அறிவிக்கப்பட்டுள்ளன. சில தொழில்நுட்ப காரணங்களால் தற்காலிக இடையூறு இருந்தாலும், அவை விரைவில் முழுமையாக செயல்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அரசாங்கத்தின் இலக்கு 2030-க்குள் தமிழ்நாட்டை கொத்தடிமைத் தொழிலாளர் முறை இல்லாத மாநிலமாக மாற்றுவதாகும்” என்றார், விரிவாக.
திருவள்ளூர் மாவட்ட சட்ட பணிகள் ஆணை குழு செயலாளர் நளினி தேவி பேசுகையில், “கொத்தடிமை ஒழிப்புச் சட்டம் அமலுக்கு வந்து ஐம்பது ஆண்டுகள் கடந்துள்ள போதிலும், கொத்தடிமை முறை இன்னும் முழுமையாக ஒழிக்கப்படாத நிலை தொடர்கிறது. இதற்கு முதன்மையான காரணம், சமூகத்தின் அனைத்துத் தரப்புகளிலும் குறிப்பாக தொழிலாளர்களை வேலைக்கு அமர்த்தும் உரிமையாளர்களிடையே போதிய விழிப்புணர்வு இல்லாததுதான். கொத்தடிமை முறை சட்டப்படி முற்றிலும் ஒழிக்கப்பட்டது என்ற உண்மை, செங்கல் சூளை, அரிசி ஆலை உள்ளிட்ட துறைகளில் செயல்படும் பலருக்கு இன்னும் முழுமையாக சென்று சேரவில்லை.
மேலும், கொத்தடிமை பிரச்னை ஒரு தொழிலாளர் பிரச்னையாக மட்டுமே பார்க்கப்படுவது தவறான பார்வையாகும். இது ஒரு தீவிரமான மனித உரிமை மீறல் என்ற புரிதல் சமூகத்திலும், அதிகாரிகளிடமும் வலுப்பெற வேண்டும்.
குறைந்தபட்ச ஊதிய சட்டம் குறித்து தொழிலாளர்களுக்கே தெளிவான அறிவு இல்லாத நிலை, அவர்களை மேலும் சுரண்டுவதற்கு வழிவகுக்கிறது. முன்பணம் அல்லது கடன் வழங்கி, அந்தக் கடன் தீரும் வரை குறைந்த ஊதியத்தில் கட்டாயமாக வேலை செய்ய வைப்பதே இன்றைய கொத்தடிமைத்தனத்தின் அடிப்படை வடிவமாக உள்ளது.