தமிழக சட்டமன்றக் கூட்டங்களோ அல்லது நாடாளுமன்றக் கூட்டங்களோ நடைபெறும் சமயங்களில், நாம் அடிக்கடி கேட்கும் ஒரு வார்த்தை ‘கொறடா’.
‘ஆளுங்கட்சி கொறடா உத்தரவு’, ‘கொறடா உத்தரவை மீறிய எம்.எல்.ஏ-க்கள்’ என்று பேசப்படும் இந்தப் பதவி குறித்து உங்களுக்கு தெரியுமா?
கொறடா
சட்டசபை மற்றும் நாடாளுமன்ற அவைகளில் தம் கட்சிக் உறுப்பினர்களை வழிநடத்த உருவாக்கப்பட்ட ஒரு பதவிதான் ‘கொறடா’.
கொறடா என்பவர், கட்சிக்கும், ஆட்சிக்கும் இடையில் பாலமாக செயல்படுவார்.

இந்தியா, இங்கிலாந்து நாடாளுமன்ற அமைப்பை பின்பற்றியதால் அதன் தொடர்ச்சியாக ‘கொறடா’ என்ற பதவி இங்கு கொண்டு வரப்பட்டிருக்கிறது.
சட்டப்பேரவைத் தேர்தலில் வெற்றி பெற்று பெரும்பான்மை எம்எல்ஏக்களுடன் ஆட்சியமைக்கும் கட்சியில் இருந்து, ஒரு எம்எல்ஏ தேர்வு செய்யப்பட்டு, அவர் அரசு கொறடாவாக அறிவிக்கப்படுவார்.
அதேபோல, எதிர்க்கட்சிகளின் சார்பிலும், ஒவ்வொரு கட்சியிலும் ஒரு ‘கொறடா’ தேர்வு செய்யப்படுவார்.
கொறடாவின் பணிகள்
அவையில் குறிப்பிட்ட நாள்களில்(எ.கா: வாக்கெடுப்பு நாள்) உறுப்பினர் அனைவரும் வருகைதர வேண்டும் என கட்சி சார்பாக உத்தரவிடுவது, வாக்கெடுப்பின் போது கட்சியால் முடிவு செய்யப்பட்டபடியே வாக்களிக்க வேண்டும் என்று உறுப்பினர்களுக்கு உத்தரவிடுவது போன்றவை கொறடாவின் பணிகளாகும்.

அதேபோல அரசு தீர்மானத்தின் மீது பேசுவதற்கும், மானிய கோரிக்கை மீது பேசுவதற்கும் எம்எல்ஏக்களை அனுமதிப்பது, அதை பேரவைத் தலைவருக்கு தெரிவிப்பது உள்ளிட்டவைகளும் கொறடாவின் பணிகளாகும்.
கொறடாவின் அதிகாரம்
கொறடாவின் உத்தரவை மதிக்காமல் எந்த உறுப்பினராவது கட்சியின் முடிவிற்கு எதிராக மாற்றி வாக்களித்தால் அவரது அவை உறுப்பினர் பதவியை (எம்.பி அல்லது எம்.எல்.ஏ) பறிக்க அவைத்தலைவரிடம் பரிந்துறை செய்யப்படும் அதிகாரம் அவருக்கு இருக்கிறது.
அரசு ‘கொறடா’ என்பவர், மாநில அமைச்சருக்கு இணையான அந்தஸ்து பெற்றவர். அவருக்கு அமைச்சருக்கு உண்டான வாகனம், தனி அறை உள்ளிட்ட சலுகைகள் வழங்கப்படும்.

‘கொறடா’ பதவியில் இருப்பவர்களுக்கு ஒரு விதிவிலக்கு உண்டு. இந்தியாவில் குடியரசுத் தலைவருக்கான தேர்தலின்போது கொறடாக்கள் தம் கட்சி எம்.பி, எம்.எல்-களை கட்டுப்படுத்த இயலாது. அவர்கள் தங்கள் விருப்பப்படுவர்களைத் தேர்ந்தெடுத்து கொள்ளலாம்.