வாழைத்தண்டு சாற்றுக்கு சிறுநீரகக் கற்களைக் கரைக்கும் தன்மை உண்டு என்பது உண்மைதான். ஆனால், இந்த விஷயத்தில் சிறுநீரகக் கற்களின் அளவு முக்கியம். அந்த அளவைப் பொறுத்துதான் அந்தக் கற்களைக் கரைக்க வாழைத்தண்டு சாறு மட்டுமே போதுமா என்று தீர்மானிக்க முடியும். அளவில் மிகச் சிறிய கற்கள் என்றால் வாரத்தில் மூன்று நாள்களுக்கு 30 மில்லி அளவுக்கு வாழைத்தண்டு சாறு குடிக்கலாம். பெரிய கற்களுக்கு இந்தச் சிகிச்சையை மட்டுமே நம்புவது சரியல்ல. சித்த மருத்துவ சிகிச்சை எடுக்க விரும்பினால், மருத்துவரை கலந்தாலோசியுங்கள். அவர் வாழைத்தண்டு சாற்றுடன் வேறென்ன மூலிகைகள் சேர்த்து எடுக்க வேண்டும் என்று பரிந்துரைப்பார்.
சிறுநீரகக் கற்களைப் போக்க வாழைத்தண்டை சிறுபருப்புடன் சேர்த்து கூட்டாகச் செய்து சாப்பிடுவது, சாலடாக எடுத்துக்கொள்வது போன்றவற்றுடன் முள்ளங்கி, மூக்கிரட்டை, சிறுபீளை, நெருஞ்சில், ஆவாரம்பூ, பூசணிச்சாறு, வெள்ளரி விதை, கற்றாழை, கறிவேப்பிலை போன்றவற்றையும் அடிக்கடி உணவில் சேர்த்துக்கொள்ள வேண்டும்.

வெளியே செல்லும்போது சோடா போன்ற செயற்கை பானங்களைத் தவிர்த்து, நீராகாரம், இளநீர், நுங்கு ஜூஸ், பழச்சாறுகள் போன்றவற்றை அதிகம் எடுத்துக்கொள்ள வேண்டும். உப்புச்சத்து அதிகமுள்ள கருவாடு, ஊறுகாய் போன்ற உணவுகளைத் தவிர்க்க வேண்டும். கீரை சமைக்கும்போது தக்காளி சேர்த்துச் சமைப்பதைத் தவிர்க்கவும். கீரையோடு பூண்டு மட்டும் சேர்த்துக் கடைந்து சாப்பிடுவது போதுமானது.
உடலைக் குளிரச்செய்யும் விஷயங்களைப் பின்பற்ற வேண்டியது அவசியம். சரியான தூக்கம், வாரம் ஒருமுறை எண்ணெய்க் குளியல் எடுப்பது, வெட்டிவேரும் விளாமிச்சை வேரும் ஊறவைத்த தண்ணீரைப் பருகுவது, தாழம்பூ சேர்த்த பானங்களைக் குடிப்பது போன்றவை உதவும்.
உங்கள் கேள்விகளை கமென்ட் பகுதியில் பகிர்ந்துகொள்ளுங்கள்; அதற்கான பதில்கள் தினமும் விகடன் இணையதளத்தில் #DoctorVikatan என்ற பெயரில் வெளியாகும்.