கோட்டையை போராடி இழந்த உத்தவ்: ஷிண்டேயுடன் சேர்ந்து மும்பை மாநகராட்சியை கைப்பற்றிய பாஜக!

Spread the love

மும்பை உட்பட மகாராஷ்டிரா முழுவதும் உள்ள மாநகராட்சிகளுக்கு நேற்று தேர்தல் நடந்தது. இத்தேர்தலில் மும்பைதான் அனைவரின் கவனத்தையும் ஈர்த்தது. மும்பை மாநகராட்சி தேர்தலில் உத்தவ் தாக்கரே தலைமையிலான சிவசேனாவும், ராஜ் தாக்கரே தலைமையிலான நவநிர்மாண் சேனாவும் கூட்டணி அமைத்து போட்டியிட்டன. இது தவிர பா.ஜ.கவும், ஏக்நாத் ஷிண்டே தலைமையிலான சிவசேனாவும் கூட்டணி அமைத்திருந்தன. அஜித்பவார் தலைமையிலான தேசியவாத காங்கிரஸ் மும்பையில் தனித்து போட்டியிட்டது. காங்கிரஸ் கட்சி பிரகாஷ் அம்பேத்கர் தலைமையிலான வஞ்சித் பகுஜன் அகாடியுடன் கூட்டணி அமைத்து போட்டியிட்டது.

நேற்றைய தேர்தலில் வாக்காளர்களுக்கு கையில் மை வைக்க மார்கர் பேனா பயன்படுத்தப்பட்டதாகவும், அந்த பேனா மையை அழித்துவிட்டு திரும்ப திரும்ப கள்ள ஓட்டு போட்டதாக எதிர்க்கட்சிகள் குற்றம் சாட்டி இருந்தன.

தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்புகளில் மும்பை மாநகராட்சியை பா.ஜ.க கூட்டணி கைப்பற்றும் என்று குறிப்பிடப்பட்டு இருந்தது. தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்புகளின் படியே தேர்தல் முடிவுகள் இருந்தது.

ஆரம்பத்தில் இருந்தே பா.ஜ.கவும், ஏக்நாத் ஷிண்டே தலைமையிலான சிவசேனாவும் முன்னிலையில் இருந்தது. உத்தவ் தாக்கரே தலைமையிலான சிவசேனாவும் கடுமையான போட்டியை கொடுத்தது. பா.ஜ.கவுக்கு நிகரான இடங்களில் தொடர்ந்து முன்னிலை பெற்று வந்தது. ஆனால் இறுதியில் பா.ஜ.க 87 இடங்களிலும், உத்தவ் தாக்கரே தலைமையிலான சிவசேனா 73 இடங்களிலும் முன்னிலையில் இருந்தது. ஏக்நாத் தலைமையிலான சிவசேனா 29 இடங்களில் முன்னிலையில் இருந்தது.

இதன் மூலம் பா.ஜ.கவும், சிவசேனாவும்(ஷிண்டே) சேர்ந்து மும்பை மாநகராட்சியை கைப்பற்றி இருக்கிறது. மும்பை மாநகராட்சி 30 ஆண்டுகளுக்கு பிறகு சிவசேனாவின் கையை விட்டு சென்று இருக்கிறது. அதேசமயம் மும்பை மாநகராட்சியை பிடிக்க வேண்டும் என்ற பா.ஜ.கவின் கனவும் நிறைவேறி இருக்கிறது. அதற்கு ஏக்நாத் ஷிண்டே சகுனியாக இருந்து பா.ஜ.கவிற்கு உதவி செய்துள்ளார்.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *