சென்னை: கோயில்கள், மடங்களி்ன் நிதி, சொத்துகள் தொடர்பான அரசாணைகள், டெண்டர் அறிவிக்கைகள், அனுமதி உத்தரவுகள் ஆகியவற்றை அறநிலையத் துறை இணையதளத்தில் உடனுக்குடன் பதிவேற்றம் செய்யக்கோரி உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது. இது குறித்து தமிழக அரசு, அறநிலையத் துறை பதில் அளிக்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
இதுதொடர்பாக ஆலய வழிபடுவோர் சங்கத் தலைவர் மயிலாப்பூர் டி.ஆர். ரமேஷ், தாக்கல் செய்த மனு: தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின்படி அரசுத் துறைகளின் அரசாணைகள், டெண்டர் அறிவிக்கைகள், அனுமதி உத்தரவுகளை அனைவரும் தெரிந்து கொள்ளும் வகையில் அரசு இணையதளங்களில் வெளிப்படையாக கட்டாயம் பதிவேற்றம் செய்ய வேண்டும். ஆனால், இந்து சமய அறநிலையத் துறையின் இணையதளத்தில் கடந்த 2022-ம் ஆண்டுக்குப் பிறகு எந்தவொரு தகவலும் புதிதாக பதிவேற்றம் செய்யப்படவில்லை.
அறநிலையத் துறை நிர்வாகத்தின் அன்றாட செயல்பாடுகள், துறை ஆணையர் வசம் உள்ள பொதுநல நிதி குறித்து எந்த தகவலும் வெளிப்படையாக தெரிவிப்பதில்லை.
எனவே, கோயில்கள், மடங்கள், இந்து மத கட்டளைகளின் நிதி, சொத்துகள் தொடர்பான அறநிலையத் துறையின் அர சாணைகள், டெண்டர் அறிவிக்கைகள், அனுமதிக்கான உத்தரவுகளை பொதுவெளியில் அனைவரும் உடனே அறிந்து கொள்ளும் வகையில், அறநிலையத் துறையின் இணையதளத்தில் கட்டாயம் பதிவேற்றம் செய்யுமாறு உத்தரவிட வேண்டும். அதுவரை, டெண்டர் உள்ளிட்ட எந்த பணிகளையும் இறுதி செய்ய தடை விதிக்க வேண்டும். இவ்வாறு கோரியிருந்தார்.
நீதிபதி வி.லட்சுமி நாராயணன் முன்பு இந்த மனு மீதான விசாரணை நடந்தது. மனுதாரர் தரப்பில் வழக்கறிஞர் பி.ஜெகந்நாதன், அறநிலையத் துறை தரப்பில் வழக்கறிஞர் எஸ்.ரவிச்சந்திரன், மாநில தகவல் ஆணையம் தரப்பில் வழக்கறிஞர் விக்னேஸ்வரன் ஆஜராகி வாதிட்டனர்.
வழக்கை விசாரித்த நீதிபதி இதுதொடர்பாக தமிழக அரசும் அறநிலையத் துறையும் பதில் அளிக்க உத்தரவிட்டு, விசாரணையை அக்.29-க்கு தள்ளிவைத்தார்.