சேலம் மாவட்டம் ஓமலூர் கண்ணனூர் மாரியம்மன் கோவிலுக்கு சொந்தமான நிலங்கள் ஆக்கிரமிப்புகள் செய்யப்பட்டதாகவும், கோவிலுக்கு சொந்தமான கனிம வளங்கள் கொள்ளை அடிக்கபட்டதாகவும் சேலத்தைச் சேர்ந்த ஆ இராதாகிருஷ்ணன் என்பவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.
இந்த வழக்கை விசாரித்த உயர்நீதிமன்றம் வழக்கில் நேரில் ஆஜராகுமாறு சேலம் இந்து அறநிலையத்துறை இணை ஆணையருக்கு உத்தரவிட்டிருந்ததது. இந்நிலையில் இந்த வழக்கு இன்று மீண்டும் நீதிபதிகள் எஸ் எம் சுப்பிரமணியம், சி.குமரப்பன் ஆகியோர் முன்பு விசாரணைக்கு வந்தது, அப்போது சேலம் இந்து சமய அறநிலையத்துறை இணை ஆணையர் வே சபர்மதி நேரில் ஆஜரானார்.
அப்போது இந்து அறநிலையத்துறை அதிகாரிகளின் அலட்சியப் போக்கிற்கு நீதிபதிகள் கடும் கண்டனம் தெரிவித்தனர் அப்போது வழக்கின் விசாரணையின் போது, நீதிபதிகள், கோயில் சொத்துக்களை பாதுகாப்பதற்காக சம்பளம் வாங்குகிறீர்கள். ஆனால் அந்த பணியை சரிவர செய்யாமல், அதற்கு துரோகம் செய்கிறீர்கள் என அதிகாரிகளின் அலட்சிய போக்கிற்கு கண்டனம் தெரிவித்தனர்.
மேலும், அறநிலையத்துறை அதிகாரிகளின் அலட்சியங்களினால் ஏராளமான கோவில் சொத்துக்கள் பறிபோயுள்ளது என்றும், இவ்வாறான அலட்சியங்களை அனுமதிக்க முடியாது என்றும் தெரிவித்த நீதிபதிகள், சம்மந்தப்பட்ட அதிகாரிகள் மீது ஒழுங்கு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட வேண்டும் என்றும்,இந்த விவகாரத்தில் நடைபெற்கொள்ள கனிம வள கொள்ளைகளுக்கு எதிராக உரிய இழப்பீடுகள் வசூலிக்கப்பட வேண்டும் என்றும் உத்தரவிட்டனர்.
