கோவை மாவட்டம், கோவைப்புதூர் பகுதியில் தமிழ்நாடு 4-வது பட்டாலியன் படைப் பிரிவு இயங்கி வருகிறது. இதில் கமாண்டாக காவல் கண்காணிப்பாளர் அந்தஸ்தில் செந்தில்குமார் என்பவர் பணியாற்றி வந்தார்.
இவர் அங்கு பணியாற்றி வந்த பெண் போலீஸார் மற்றும் பெண் ஊழியர்கள் பலருக்குப் பாலியல் தொந்தரவு கொடுத்து வந்துள்ளார். பெண்களிடம் பாலியல் ரீதியாக அத்துமீறி, அநாகரீகமாகப் பேசி வந்துள்ளார்.
இதில் பாதிக்கப்பட்ட பெண் போலீஸார் செந்தில்குமார் குறித்து உயரதிகாரிகளிடம் புகார் அளித்தனர். அதனடிப்படையில் துறை ரீதியான விசாரணை நடைபெற்று வந்தது.

அதன் தொடர்ச்சியாக கடந்த மாதம் செந்தில் குமார் பணியிடை நீக்கம் செய்யப்பட்டார். பாதிக்கப்பட்ட பெண்கள் போத்தனூரில் உள்ள கோவை தெற்கு அனைத்து மகளிர் காவல் நிலையத்திலும் புகார் அளித்திருந்தனர்.