அன்னை வாராஹி ஆபத்துகளில் இருந்து நம்மைக் காப்பவள். இந்த அகிலத்தை ஆளும் அன்னை ராஜராஜேஸ்வரியில் அருகில், “தண்டினி’ என்கிற திருநாமத்தோடு அருள்பவள். லலிதாம்பிகையின் படைத்தளபதியாகத் திகழ்பவள். வராக (பன்றி) முகத்துடன் அருள்வதால் இவளுக்கு, ‘வாராஹி’ என்ற திருநாமம் ஏற்பட்டது.
பரமேஸ்வரனைப்போன்று மூன்று திருக்கண்கள் உடைய இந்த அன்னை எட்டு திருக்கரங்களுடன் திகழ்பவள். சங்கு – சக்கரம், கட்கம்(கத்தி), உலக்கை, கலப்பை, உடுக்கை ஆகியன ஏந்தி அபய- வரத முத்திரைகளுடன் காட்சி தருபவள் இந்த அன்னை.
சிவப்பு நிற ஆடை உடுத்தி, சந்திர கலை தரித்து நவரத்தினக் கிரீடம் அணிந்தவளாக சிம்ம வாகனத்தில் வீற்றிருக்கும் இந்த அன்னையை தரிசித்து வழிபட்டால் துன்பங்கள் அகலும்; பூமி தொடர்பான அனைத்துக் காரியங்களும் சுமுகமாக நடந்தேறும். இயற்கைச் சீற்றங்களில் இருந்து விடுபடலாம். எதிரிகளின் தொல்லைகள் தீரும்.
ஸ்ரீவாராஹி மந்திரபீடம்
அன்னை வாராஹிக்கு ஆங்காங்கே கோயில்கள் அமைந்திருந்தாலும் அன்னைக்கென்றே பிரத்யேகமாக 64 வாராஹி ரூபங்களும் எழுந்தருளியிருக்கும் கோயிலாகத் திகழ்கிறது, ‘சித்தாத்தூர் ஸ்ரீவாராஹி மந்திர பீடம்.’ இந்த இடத்துக்கு வந்தாலே மனம் அமைதி அடைவதோடு நேர்மறை அதிர்வுகள் நிறைவதையும் உணரலாம். காரணம், இது சித்தர்கள் அன்னையை வழிபட்ட பூமி என்பதுதான்.

முற்காலத்தில் இந்தப் பகுதி, ‘சித்தர்கள் வாழும் ஊர்’ என்று அழைக்கப்பட்டுபின் சித்தாத்தூர் என்று மருவியது என்கிறார்கள். அதற்கேற்ப இந்தக் கோயிலில் மாண்டுக சித்தரின் ஜீவசமாதி அமைந்திருப்பதும் குறிப்பிடத்தக்கது.
இந்த ஆலயத்தில் மூலவராக அன்னை ராஜராஜேஸ்வரி திகழ்கிறாள். அவளுக்கு எதிர்புறம் அகத்தியரின் சந்நிதி அமைந்திருக்கிறது. அகத்தியர் கண்கள் அன்னையை தரிசிக்கும் வகையில் நேராக அமைக்கும்படி உத்தரவுகிடைத்து அதற்கேற்ப இங்கே பிரதிஷ்டை செய்திருக்கிறார்கள். ஆலயத்துக்கு நுழையும் முன்பாக வெளியே பிரமாண்ட முருகர் திருமேனி அமைந்துள்ளது. அதை தரிசித்து உள் நுழைந்தால் திருக்குளம்.
இந்தத் திருக்குளத்தில் அபூர்வ அத்தி மர வாராஹியின் திருமேனி ஒன்று நீரில் அமிழ்ந்திருக்கிறது. மிகவும் உக்கிரமாகவும் அதேவேளையில் வேண்டும் வரம் அருள்பவளாகவும் திகழும் இந்த அன்னையை ஒவ்வொரு பௌர்ணமிக்கும் வெளியே எழுந்தருளச் செய்து வழிபாடுகள் செய்து மீண்டும் திருக்குளத்தில் இட்டுவிடுகிறார்கள். இந்தப் பௌர்ணமி பூஜையில் கலந்துகொண்டால் பாவங்கள் விலகும். பகைவர்கள் தொல்லை மறையும் என்பது நம்பிக்கை.