சட்டமன்ற தேர்தல் படுத்தும் பாடு : ஜனவரி 13-ம் தேதி  ராமேஸ்வரத்தில் பொங்கல் கொண்டாடும் மோடி  – Kumudam

Spread the love

தமிழ்நாடு தேர்தலில் பாஜக தீவிரம் காட்டி வருகிறது. அதிமுக உடன் கூட்டணி அமைத்துள்ள நிலையில், பாமக உள்ளிட்ட மற்ற கட்சிகளையும் கூட்டணிக்குள் கொண்டு வர முனைப்பு காட்டி தீவிர பேச்சுவார்த்தையில் பாஜக ஈடுபட்டு வருகிறது. வலுவான திமுககூட்டணியை சமாளிக்க தங்களது கூட்டணியை வலுப்படுத்த வேண்டும் என்பதில் டெல்லி பாஜக தலைமை உறுதியாக உள்ளது. 

அதே நேரம் திருப்பரங்குன்றம் விவகாரத்தை கையில் எடுத்த பாஜக. அதன் மூலம் இந்துக்களின் வாக்குகளை தங்கள் பக்கம் திருப்பிவிடலாம் என நினைத்தது. ஆனால் இந்த விவகாரம் பாஜகவிற்கு பெரிய அளவில் பலன் அளிக்கவில்லை. இதனால் எந்தந்த வழிகளில் இந்துக்களின் வாக்குகளை ஒருங்கிணைக்க முடியும் என பாஜக வியூகம் வகுத்து வருகிறது. 

இதன் தொடர்ச்சியாக தமிழர்களின் முக்கிய பண்டிகைகளில் ஒன்றான பொங்கல் பண்டிகையை பாஜக கையில் எடுத்துள்ளது. அதன்படி ராமேஸ்வரத்தில் பிரதமர் மோடி பங்கேற்கும் பொங்கல் பண்டிகை நிகழ்ச்சியை பிரமாண்டமாக நடத்த முடிவு செய்துள்ளது. ஜனவரி 13-ம் தேதி இந்த நிகழ்ச்சியை நடத்த தமிழக பாஜக தீவிரம் காட்டி வருகிறது. 

ஜனவரி 13-ம் தேதி தொடங்கி 15-ம் தேதி வரை மூன்று நாட்களுக்கு தமிழ்நாட்டில் சுற்றுப்பயணம் மேற்கொள்ள இருப்பதாக தெரிகிறது. இந்த பயணத்தின் போது, தமிழக விவசாயிகளுடன் பொங்கல் விழா கொண்டாட்டத்தில் பங்கேற்பார் என்று கூறப்படுகிறது. அப்படி நடந்தால் தமிழகத்தில் விவசாயிகளுடன் இணைந்து முதல்முறையாக பிரதமர் மோடி கொண்டாடும் பொங்கல் விழாவாக இது இருக்கும். இதுபோக பொங்கல் விழாவை ஒட்டி நடைபெறும் பல்வேறு கலைநிகழ்ச்சிகளிலும் அவர் பங்கேற்கக் கூடும் என கூறப்படுகிறது.

காசி தமிழ் சங்கமத்தின் 4.0 நிறைவு விழா ராமேஸ்வரத்தில் ஜனவரி 13 முதல் 15-ம் தேதி வரை நடைபெற உள்ளது. இந்த நிகழ்ச்சியில் பொங்கல் பண்டிகை கொண்டாட்டத்தை பாஜக ஏற்பாடு செய்து வருகிறது. 

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *