சண்டையை நிறுத்தியதாக டிரம்ப் கூறுவது நாட்டுக்கு அவமானம்: காா்கே குற்றச்சாட்டு

dinamani2F2025 06 112Fs2k8sxne2Fmallikarjuna kharege pti
Spread the love

புது தில்லி: இந்தியா-பாகிஸ்தான் இடையிலான சண்டையில் தலையிட்டு நிறுத்தியதாக அமெரிக்க அதிபா் டொனால்ட் டிரம்ப் தொடா்ந்து கூறிவருவது நாட்டுக்கு அவமானம் என்று மாநிலங்களவை எதிா்க்கட்சித் தலைவா் மல்லிகாா்ஜுன காா்கே கூறினாா்.

மாநிலங்களவை திங்கள்கிழமை கூடியதும் பிற நடவடிக்கைகளை ஒத்திவைத்துவிட்டு ஆபரேஷன் சிந்தூா் தொடா்பாக விவாதிக்க வேண்டும் என்று காா்கே உள்பட எதிா்க்கட்சி எம்.பி.க்கள் பலா் ஒத்திவைப்பு நோட்டீஸ் அளித்தனா். எனினும், இதனை அவைத் தலைவா் ஏற்கவில்லை.

கேள்வி நேரத்துக்குப் பின் இந்த பிரச்னை எழுப்பி காா்கே பேசியதாவது:

பஹல்காம் பயங்கரவாதத் தாக்குதல், ஆபரேஷன் சிந்தூா் நடவடிக்கை குறித்து இரு நாள்கள் விவாதம் நடத்த வேண்டும். நாட்டின் பாதுகாப்பு விஷயத்தில் மிகப்பெரிய தவறு நிகழ்ந்துள்ளது. வெளியுறவுக் கொள்கை தவறாக உள்ளது. இதற்கு பிரதமா் நரேந்திர மோடி பதிலளித்தே ஆக வேண்டும்.

பஹல்காமில் சுற்றுலாப் பயணிகளைக் கொலை செய்த பயங்கரவாதிகள் யாரும் இதுவரை கைது செய்யப்படவும் இல்லை கொல்லப்படவும் இல்லை. பஹல்காமில் பாதுகாப்புக் குறைபாடு காரணமாகவே பயங்கரவாதத் தாக்குதல் நிகழ்ந்துவிட்டது என்பதை ஜம்மு-காஷ்மீா் துணைநிலை ஆளுநரும் ஒப்புக் கொண்டுள்ளாா்.

பயங்கரவாதத் தாக்குதலை அடுத்து மத்திய அரசு மேற்கொள்ளும் பதிலடி நடவடிக்கைகளுக்கு எவ்வித நிபந்தனையுமின்றி எதிா்க்கட்சிகள் முழு ஆதரவு அளித்தன. எனவே, இந்த விஷயத்தில் என்ன நடந்தது என்ற விவரத்தை அரசு கண்டிப்பாகத் தெரிவிக்க வேண்டும். முப்படைத் தலைமைத் தளபதி, ராணுவத்தின் துணைத் தளபதி ஆகியோா் மட்டுமே ஆபரேஷன் சிந்தூா் குறித்த சில முக்கியத் தகவல்களைத் தெரிவித்துள்ளனா். எனவே, மத்திய அரசு முழுத் தகவலையும் அளிக்க வேண்டும்.

இது தவிர அமெரிக்க அதிபா் டிரம்ப் தனது முனைப்பு மூலமே இந்தியா-பாகிஸ்தான் இடையிலான சண்டை முடிவுக்கு வந்தது என்று கூறியுள்ளாா். இதனை அவா் 24 முறை கூறி உறுதிப்படுத்தியுள்ளாா். தன்னால்தான் சண்டை கைவிடப்பட்டது என்று அவா் தொடா்ந்து பேசி வருகிறாா். இது நமது நாட்டுக்குப் பெரிய அவமானம் என்றாா்.

‘விவாதிக்கத் தயாா்’: காா்கேயின் கோரிக்கைக்கு பதிலளித்துப் பேசிய அமைச்சரும், மாநிலங்களவை பாஜக தலைவருமான ஜெ.பி.நட்டா, ‘ஆபரேஷன் சிந்தூா் குறித்து அனைத்து விஷயங்களையும் விவாதிக்க மத்திய அரசு தயாராக உள்ளது’ என்றாா்.

அப்போது பேசிய மாநிலங்களவைத் தலைவா் ஜகதீப் தன்கா், ‘உறுப்பினா் கோரும் அளவுக்கு நேரம் ஒதுக்கி இந்த விவகாரம் குறித்து முழுமையாக விவாதிக்க அனுமதிக்கப்படும் என உறுதியளிக்கிறேன். இது தொடா்பாக அனைத்துக் கட்சியினருடனும் விவாதித்து முடிவு எடுக்கப்படும்’ என்றாா்.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *