சபரிமலையில் வழக்கமாக மண்டல பூஜை, மகர விளக்கு தரிசனத்திற்கு கோவில் நடை திறக்கப்படுவது வழக்கம். இந்த நடை திறப்பின் போது பக்தர்கள் சாமி தரிசனத்திற்கு அனுமதிக்கப்படுவர். அந்த வகையில், கடந்த ஆண்டு (2024-2025) சபரிமலை சீசனில், மண்டல பூஜை மற்றும் மகர விளக்கு தரிசனத்திற்காக, கோவில் நடை திறக்கப்பட்டதிலிருந்து சுமார் 22 லட்சத்திற்கும் மேலான பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர்.
அந்த வகையில், சபரிமலையில் மண்டல, மகர விளக்கு சீசனையொட்டி கடந்த மாதம் 16-ந்தேதி நடை திறக்கப்பட்டது. 17-ந் தேதி முதல் பூஜை, வழிபாடுகள் நடந்து வருகிறது. சீசனையொட்டி அடுத்த மாதம் (ஜனவரி) 10-ந் தேதி வரை தரிசனத்திற்கான ஆன்லைன் முன்பதிவு (தினசரி 70 ஆயிரம் பக்தர்கள்) நிறைவடைந்தது.
உடனடி தரிசன முன்பதிவு அடிப்படையில் தினசரி 10 ஆயிரம் முதல் 15 ஆயிரம் பக்தர்கள் அனுமதிக்கப்பட்டு வருகிறார்கள். நடப்பு சீசனையொட்டி மண்டல பூஜை வருகிற 27-ந் தேதியும், மகர விளக்கு பூஜை அடுத்த மாதம் 14-ந் தேதியும் நடக்கிறது.
இந்தநிலையில் பக்தர்களின் வருகை குறித்து திருவிதாங்கூர் தேவஸ்தானம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:- சபரிமலையில் மண்டல பூஜையை முன்னிட்டு நடை திறக்கப்பட்டு இதுவரை 29 நாட்களில் சாமி தரிசனம் செய்த பக்தர்களின் எண்ணிக்கை 25 லட்சத்தை கடந்துள்ளது. கடந்த 8-ந்தேதி ஒரே நாளில் அதிகபட்சமாக 1 லட்சத்து ஆயிரத்து 844 பேர் தரிசனம் செய்தனர். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
ஜனவரி மாதம் மகர விளக்கு தரிசனத்துடன் சேர்த்து சுமார் 40 லட்சத்திற்கும் அதிக பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய வாய்ப்புள்ளதாக திருவிதாங்கூர் தேவஸ்தான போர்டு தகவல்கள் தெரிவிக்கின்றன.
