கார்த்திகை மாதம் பிறந்ததையொட்டி, சபரிமலை ஐயப்பன் கோயிலுக்கு செல்ல பக்தர்கள் மாலை அணிந்துள்ளனர். தற்போது சபரிமலையில் பக்தர்கள் கூட்டம் அதிகரித்து காணப்படுகிறது. மண்டல – மகரவிளக்கு பூஜை காலத்திற்காக நடை திறக்கப்பட்ட நவம்பர் 16 ஆம் தேதி முதல் தற்போது வரை சபரிமலை, பம்பை, நிலக்கல் மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் இருந்து சுமார் 65 பாம்புகளை வனத்துறையினர் பிடித்துள்ளனர்.
வனத்துறையினர், அவற்றை அடர்ந்த வனத்திற்குள் விட்டுள்ளனர். அதில் 16 சேரை, 11 விரியன், 8 நாகப் பாம்புகள் அடங்கும். இதனால், சபரிமலைக்கு வரும் பக்தர்கள் பாதுகாப்பாக இருக்குமாறு வனத்துறை அறிவுறுத்தி உள்ளது.
போட்டோ, சிலைக்கு எடுக்க தடை
சபரிமலை சன்னிதான திருமுற்றத்தில், பக்தர்கள் தங்கள் மொபைல் போன்களில் போட்டோ எடுக்க தடை செய்யப்பட்டுள்ளது. இதை மீறுபவர்களின் மொபைல் போன் பறிமுதல் செய்யப்படுவதுடன் அபராதமும் விதிக்கப்படும் என தேவசம்போர்டு அறிவித்துள்ளது.
பக்தர்கள், அய்யப்பன் சிலைகளை இருமுடி கட்டுடன் கொண்டு வந்து, அய்யப்பனை தரிசனம் நடத்திய பின், ஊருக்கு கொண்டு செல்வது வழக்கம். தற்போது இதற்கும் தடை விதிக்கப்பட்டுள்ளது. படியேறும் முன் அதை எங்காவது வைத்துவிட்டு, அய்யப்பனை தரிசித்து திரும்பி போகும் போது எடுத்து செல்ல அறிவுறுத்தப்பட்டுள்ளது.
