கடந்த 2019-ஆம் ஆண்டு சபரிமலை கோயிலின் கருவறைக் கதவுகள் மற்றும் துவார பாலகர் சிலைகளின் தங்கக் கவசங்கள் புதுப்பிக்கப்பட்டன. இந்தப் பணிகள் முடிந்த பிறகு, தங்கக் கவசங்களின் எடை குறைந்திருப்பதாகப் புகார் எழுந்தது. இது தொடர்பாகக் கேரள உயர்நீதிமன்ற உத்தரவின் பேரில் சிறப்புப் புலனாய்வுக் குழு (SIT) அமைக்கப்பட்டு, பெங்களூரு தொழிலதிபர் உண்ணிகிருஷ்ணன் போற்றி மற்றும் திருவிதாங்கூர் தேவஸ்வம் வாரிய முன்னாள் தலைவர்கள் உட்பட 12 பேர் கைது செய்யப்பட்டு விசாரணை வளையத்திற்குள் கொண்டு வரப்பட்டனர்.
இந்த வழக்கில் முக்கியக் குற்றவாளியாகக் கருதப்படும் உண்ணிகிருஷ்ணன் போற்றிக்கும் நடிகர் ஜெயராமுக்கும் இடையிலான நெருக்கமான பழக்கமே இந்த விசாரணைக்குக் காரணமாகியுள்ளது. விசாரணையில், உண்ணிகிருஷ்ணன் போற்றி சபரிமலையிலிருந்து கொண்டு வரப்பட்ட தங்கத் தகடுகள் மற்றும் துவார பாலகர் சிலைகளுடன் நடிகர் ஜெயராமின் சென்னை வீட்டிற்குச் சென்று சிறப்புப் பூஜைகள் செய்தது தெரியவந்துள்ளது. இதன் அடிப்படையில், எஸ்டிஏ (SIT) அதிகாரிகள் ஜெயராமிடம் தீவிர விசாரணை நடத்தினர்.
அதிகாரிகளின் விசாரணைக்கு ஒத்துழைப்பு அளித்த நடிகர் ஜெயராம், “கடந்த 40 ஆண்டுகளாக நான் சபரிமலைக்குச் சென்று வருவதால் உண்ணிகிருஷ்ணன் போற்றியுடன் பழக்கம் ஏற்பட்டது. அவரை மிகவும் நம்பியதால், எனது வீட்டிற்குப் பலமுறை அவர் வந்து செல்ல அனுமதித்தேன். சிலைகளுடன் வந்து பூஜை செய்ததும் உண்மைதான். ஆனால், அவரிடம் நான் எவ்வித பணப் பரிமாற்றமும் செய்து கொள்ளவில்லை. அவரது மோசடி நடவடிக்கைகள் குறித்து எனக்கு எதுவும் தெரியாது” என்று தனது வாக்குமூலத்தில் தெரிவித்துள்ளார். மேலும், நடிகர் ஜெயராம் இந்த வழக்கில் முக்கியச் சாட்சியாகச் சேர்க்கப்பட வாய்ப்புள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இதற்கிடையில், தங்க முறைகேடு வழக்கு விசாரணையின்போது எஸ்ஐடி-க்கு சட்ட ஆலோசனைகளை வழங்கவும், குற்றப்பத்திரிகையை நீதிமன்றத்தில் தாக்கல் செய்வதற்கு முன்பாக அதைச் சரிபாா்க்கவும் சிறப்பு அரசு வழக்குரைஞராக என்.கே. உண்ணிகிருஷ்ணனை மாநில அரசு நியமித்துள்ளதாக அதிகாரிகள் நேற்று தெரிவித்தனா்.
