இத்திட்டத்தின் முக்கியத்துவம் மற்றும் வெற்றி குறித்து ஆஷா எனும் பெயரில் தயாரிக்கப்பட்ட திரைப்படம் மராத்தியில் வெளியாகியுள்ளது. இத்திரைப்படம் குறித்து கடந்த 27 ஆம் தேதி சென்னையில் நடந்த நிகழ்ச்சியில் படத்தின் இயக்குனர் தீபக் பாட்டில் தயாரிப்பாளர் தைவதா பாட்டில் ஆகியோருடன் அன்புமணியும் கலந்துகொண்டார். அப்போது பேசிய அன்புமணி, “நான் மத்திய சுகாதாரத்துறை அமைச்சராக இருந்தபோது பத்து மாதம் திட்டமிட்டு ஆஷா திட்டத்தை உருவாக்கினேன். கடநத இருபது ஆண்டுகளில் இத்திட்டம் மிகப்பெரும் வெற்றி அமைந்துள்ளது. 2005-ல் ஒரு லட்சம் பிரசவத்தில் தாய், இறப்பு விகிதம் 300 ஆக இருநதது. அது இப்பொழுது 88 ஆக குறைந்துள்ளது. குழந்தைகள் இறப்பு விகிதம் 1000 க்கு 68 ஆக இருந்தது, இப்போது 35 ஆக குறைந்துள்ளது. ஆஷா திட்டம் மட்டுமல்ல, பொது இடங்களில் புகை பிடிக்க தடை, குட்கா உள்ளிட்ட போதைப்பொருட்களுக்கு தடை போன்ற நடவடிக்கைகளை நான் எடுத்தபோது எனக்கு உறுதுணையாக இருந்தவர் அப்போது பிரதமாக இருந்த மன்மோகன் சிங்தான், இல்லாவிட்டால் என்னால் எதையும் செய்திருக்க முடியாது.” என்று பேசியிருந்தார்.

காங்கிரஸ் பிரதமர்களான நேரு முதல் மன்மோகன் சிங் வரை பாஜக தலைவர்களால் கடுமையாக விமர்சிக்கப்பட்டு வரும் நிலையில், தற்போது தங்கள் கூட்டணியில் இணைந்துள்ள அன்புமணி ராமதாஸ் மன்மோகன் சிங் ஆதரவில்தான் பிரசவ இறப்புகளை தடுக்கும் ஆஷா திட்டத்தை சிறப்பாக செயல்படுத்த முடிந்தது என்று பேசியது பாஜகவினரை அதிருப்திக்குள்ளாக்கியது. அது மட்டுமின்றி தேசிய ஜனநாயக கூட்டணியின் தேர்தல் பிரசார கூட்டத்துக்கு பிரதமர் மோடி தமிழகம் வருகின்ற நேரத்தில் அன்புமணி இப்படி பேசியதால் டென்சனான பாஜக முக்கிய நிர்வாகிகள் தங்கள் அதிருப்தியை அன்புமணி தரப்பில் தெரிவிக்க, அதன் காரணமாகவே அன்புமணி மதுரை கூட்டத்தில் பிரதமர் மோடியை புகழ்ந்தும் திமுகவை கடுமையாக விமர்சித்தும் பேசியிருந்தார் என்கிறார்கள்.