ஆந்திராவின் அன்னமய்யா மாவட்டம், கே.வி.பள்ளி மண்டலத்திற்குட்பட்ட பண்டவடிபள்ளி கிராமத்தை சேர்ந்தவர் புஷ்பராஜ். இவர் சென்னையில் சாஃப்ட்வேர் இன்ஜினியராக பணியாற்றி வருகிறார். பொங்கல் விடுமுறைக்காக சொந்த ஊருக்கு சென்ற இவர், மணிகுமார், ஷ்ரவண், வேணு, சிவமணி, அபிஷேக் ஆகிய நண்பர்களுடன் சேர்ந்து மதுபானம் அருந்தி இருக்கிறார்.
இதில் மணிகுமார், புஷ்பராஜ் ஆகிய இருவரும் அதிக அளவு பீர் குடித்த காரணத்தால் உடல்நலக்குறைவு ஏற்பட்டு இருக்கிறது. இருவரையும் அருகில் இருந்த மருத்துவமனைக்கு அழைத்து செல்லும் போது உயிரிழந்து இருக்கிறார்.இந்த சம்பவம் குறித்து கே.வி.பள்ளி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர்.
இந்த சம்பவம் குறித்து, அன்னமய்யா மாவட்ட டிஎஸ்பி எம்.ஆர். கிருஷ்ணமோகன் கூறுகையில்,”இந்த மரணங்கள் அளவுக்கு அதிகமான மது அருந்தியதாலேயே ஏற்பட்டிருக்கிறது. மணிகுமாரும், புஷ்பராஜும், நான்கு உறவினர்களுடன் கர்ணமிட்டாவில் உள்ள மதுபானக் கடையில் இருந்து 19 ‘பட்வைசர் டின் பீர்களை’ வாங்கி, சனிக்கிழமை மதியம் முதல் மாலை வரை மலைப்பகுதியில் அருந்தியுள்ளனர்.
மணிகுமாரின் தந்தை ஆவலுக்குண்டா நரசிம்முலுவின் புகாரின் பேரில், சந்தேகத்திற்குரிய மரணங்களாக வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. பீலேர் கலால் துறை, முதற்கட்ட விசாரணையை நடத்தி வருகிறது. குடித்த காலி பீர் டின்னுகளும், மீதமிருந்த உணவுப் பொட்டலங்களும் பறிமுதல் செய்யப்பட்டு தடயவியல் ஆய்வகத்திற்கு அனுப்பப்பட்டுள்ளன. உடற்கூறாய்வு அறிக்கையின் அடிப்படையில் விசாரணை தொடரும்” என கூறியுள்ளார்.
இளைஞர்கள் இருவர் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. மேலும் இளைஞர்கள் மரணம் குறித்து போலீசார் வேறு சில கோணங்களிலும் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
