மகாராஷ்டிராவில் கடந்த சில தினங்களுக்கு முன்பு துணை முதல்வர் அஜித் பவார் விமான விபத்தில் அகால மரணமடைந்தார். அவரது மரணத்தை தொடர்ந்து அவர் தலைமையில் இயங்கிய தேசியவாத காங்கிரஸ் கட்சிக்கு யார் தலைமை தாங்குவது என்ற கேள்வி எழுந்துள்ளது.
கட்சி தலைவர்கள் அஜித் பவாரின் மனைவி சுனேத்ரா பவாரிடம் துணை முதல்வர் பதவியை ஏற்றுக்கொள்ள வேண்டும் என்று கேட்டுக்கொண்டனர். அவரும் அதனை ஏற்றுக்கொண்டதாக தெரிகிறது. இதையடுத்து இன்று தேசியவாத காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் கூட்டம் மும்பையில் நடைபெறுகிறது. இக்கூட்டத்தில் முறைப்படி சுனேத்ரா பவார் கட்சியின் சட்டமன்ற தலைவராக தேர்ந்தெடுக்கப்பட இருக்கிறார்.
இது குறித்து மாநில தேசியவாத காங்கிரஸ் அமைச்சர் சகன் புஜ்பால் கூறுகையில்,”‘சுனேத்ரா பவார் துணை முதல்வராக பதவியேற்பார். இது ஒரு மித்த கருத்தின் அடிப்படையில் எடுக்கப்பட்டது. தேசியவாத காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் கூடி சுனேத்ரா பவாரை முறைப்படி சட்டமன்ற தலைவராக தேர்வு செய்ய இருக்கின்றனர்”என்றார்.
இது குறித்து தேசியவாத காங்கிரஸ் தலைவர்கள் கடந்த இரண்டு நாட்களாக முதல்வர் தேவேந்திர பட்னாவிஸை சந்தித்து பேசி வந்தனர். தேசியவாத காங்கிரஸ் கட்சியின் இம்முடிவுக்கு முதல்வர் தேவேந்திர பட்னாவிஸ் உடனே ஒப்புதல் கொடுத்து இருப்பதாக கூறப்படுகிறது. இவ்விவகாரத்தில் பா.ஜ.கவும் முக்கிய பங்கு வகித்ததாக கூறப்படுகிறது. இவ்விவகாரத்தில் தேசியவாத காங்கிரஸ் எடுக்கும் முடிவுக்கு பா.ஜ.க ஆதரவு கொடுக்கும் என்று பட்னாவிஸ் தெரிவித்துள்ளார்.
சரத் பவார் முயற்சியை தடுத்த பா.ஜ.க
அஜித் பவார் இறந்த சில நாட்களில் அவசர அவசரமாக அவரது மனைவிக்கு துணை முதல்வர் பதவி கொடுப்பது அனைவருக்கும் ஆச்சரியத்தை ஏற்படுத்தி இருக்கிறது. அஜித் பவார் இருந்த போது சரத் பவார் தலைமையில் இயங்கிய தேசியவாத காங்கிரஸ் கட்சியை தனது தலைமையில் இயங்கிய தேசியவாத காங்கிரஸ் கட்சியுடன் இணைப்பது குறித்து பேச்சுவார்த்தை நடத்தி வந்தார்.