சர்க்காரியா போய் ரே வந்தது; அதிமுக காங்கிரஸ் சேர்ந்தது! – திருப்பம் தந்த திருப்பத்தூர் | ஆடுபுலி 04 | a-political-series-on-1981-how-admk-alliance-with-congress-was-formed

Spread the love

திருப்பத்தூர் காங்கிரஸ் வேட்பாளராக எ. அருணகிரி அறிவிக்கப்பட்டார். காங்கிரஸ் வேட்பாளரை எதிர்த்து இந்திய கம்யூனிஸ்ட் கட்சி களமிறங்கியது. அதிமுக தொடங்கியது முதலே இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி எம்ஜிஆருக்கு ஆதரவாக இருந்தது. அக்கட்சியின் மாநிலத் தலைவர் எம். கல்யாணசுந்தரம் எம்ஜிஆரின் நெருங்கிய அரசியல் நண்பராகவும் இருந்தார். அந்த அடிப்படையில் இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி வேட்பாளரை முதலமைச்சர் எம்ஜிஆர் ஆதரிப்பார் என்று அனைவரும் எதிர்பார்த்தனர். 

ஆனால், அரசியல் ஆடுபுலி ஆட்டத்தின் திடீர் திருப்பமாக, இந்திரா காங்கிரஸ் கட்சியின் தமிழகத் தலைவர் எம்.பி.சுப்பிரமணியம் முதலமைச்சர் எம்ஜிஆரை அவரது இல்லத்தில் சந்தித்துப் பேசினார்.

சென்னை வந்த மத்திய அமைச்சர் வெங்கட்ராமன் கூட்டணிக் கட்சியான திமுகவை கலந்து ஆலோசிக்காமல் காங்கிரஸ் தனித்துப் போட்டியிடுகிறது என்று அறிவித்தார். 

நடப்பது ஒரே ஒரு தொகுதிக்கான இடைத்தேர்தல் என்றாலும் கூட, தமிழக அரசியலில் ஒவ்வொரு நாளும் ஆடுபுலி ஆட்டங்கள் தொடர்ந்தன.

இந்திய கம்யூனிஸ்ட் கட்சி வேட்பாளரை அதிமுக கூட்டணியில் இருக்கும் ஏழு கட்சிகளும் ஆதரிக்க வேண்டுமென கல்யாணசுந்தரம் கோரிக்கை விடுத்தார்.

திமுகவுக்கும், காங்கிரசுக்கும் சட்டமன்றத் தேர்தலோடு இருந்த உறவு முடிந்துவிட்டது, இது இடைத்தேர்தல் என்று காங்கிரஸ் தலைவர் சுப்பிரமணியம் கூறினார்.

அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் பொதுச்செயலாளர் கருப்பையா மூப்பனார், டெல்லியிலிருந்து காங்கிரஸ் மேலிடமும், பிரதமர் இந்திராகாந்தியும் நல்ல முடிவை அறிவிப்பார்கள் என்றார்.

1981 அக்டோபர் 24 அன்று திமுக தலைவர் கருணாநிதி, பேராசிரியர் அன்பழகன் ஆகியோருடன் கருப்பையா மூப்பனார், திண்டிவனம் ராமமூர்த்தி ஆகியோர் பேச்சுவார்த்தை நடத்தினர். இந்திய யூனியன் முஸ்லீம் லீக் அப்துல் சமது அந்தப் பேச்சுவார்த்தையில் உடனிருந்தார்.

இதற்கிடையில் அக்டோபர் 31 அன்று தமிழக முதலமைச்சர் எம்ஜிஆர் திடீர் பயணமாக டெல்லி சென்றார். பிரதமர் இந்திரா காந்தியை சந்தித்துப் பேசினார். மரியாதை நிமித்தமான சந்திப்பு என்றார்கள். பாரதி நூற்றாண்டு விழாவிற்கான அழைப்பு என்றார்கள். 

திருப்பத்தூர் இடைத்தேர்தல் களம் சூடுபிடிக்கத் தொடங்கியது. காங்கிரஸ் கட்சி எந்தக் கட்சியிடமும் ஆதரவு கோரவில்லை. அவர்களாக ஆதரவு கொடுத்தால் ஏற்றுக் கொள்கிறோம் என்று அறிவித்தார்கள். காங்கிரஸ் மேடையில் வேறு கட்சித் தலைவர்கள் ஏறவில்லை. 

ஆதரவு கேட்காமலேயே, காங்கிரஸ் கட்சி வேட்பாளர் அருணகிரிக்கு ஆதரவாக எம்ஜிஆர் பரப்புரை செய்தார். காங்கிரஸ் மேடையில் ஏறவில்லை. வேன் மூலமாக தொகுதியைச் சுற்றி வந்தார். 

திருப்பத்தூர் தொகுதியில் மீண்டும் காங்கிரஸ் வென்றது. காங்கிரஸ் அதிமுக கூட்டணி மலர்ந்தது. அன்று முதல் எம்ஜிஆரின் இறுதிக்காலம் வரை காங்கிரஸ் அதிமுக கூட்டணி தொடர்ந்தது.

சர்க்காரியா கமிஷன் விசாரணையில் இருந்து தப்பிக்க காங்கிரஸ் உடன் திமுக கூட்டணி சேர்ந்தது என்று விமர்சித்த எம்ஜிஆரை, இந்த முறை ரே கமிஷன் விசாரணையில் இருந்து தப்பிக்க காங்கிரஸ் உடன் அதிமுக கூட்டணி அமைத்தது என்று விமர்சனம் செய்தார் கருணாநிதி.!

அரசியலில் எல்லாம் ஆடு புலி ஆட்டம் தான் போல!

(ஆடு புலி ஆட்டம் தொடரும்)

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *