ஆனாலும், காலங்காலமாக இப்படி ஒரு தவறான கருத்து மக்களிடம் தொடர்ந்து கொண்டிருக்கிறது. பாலில் உள்ள கொழுப்புச்சத்து நமது எச்சிலைச் சற்று தடிமனாக்கலாம், இதனால் சளி அதிகமாக இருப்பது போன்ற ஓர் உணர்வு ஏற்படுமே தவிர, பால் நேரடியாக சளியை உண்டாக்குவதில்லை. பால் குடிக்கும்போது அதன் வெப்பநிலை மிக முக்கியம். குளிர்ச்சியான பாலைக் குடிக்கும்போது, அந்தக் குளிர்ச்சியால் சளி பிடிக்க வாய்ப்புள்ளது. மிதமான சூட்டில் பால் குடிப்பது தொண்டைக்கு இதத்தைத் தரும். அதே போல கடைகளில் கிடைக்கும் ஃப்ளேவர்டு மில்க்கில் (flavoured milk) சேர்க்கப்படும் சில பொருள்கள் சிலருக்கு அலர்ஜியை ஏற்படுத்தலாம். இதுவும் சளி போன்ற உணர்வுக்கு ஒரு காரணமாக இருக்கலாம்.

சிலருக்கு பால் அலர்ஜி இருக்கலாம். அவர்களுக்கு பால் உள்ளிட்ட பால் பொருள்கள் அனைத்தையும் தவிர்க்குமாறு மருத்துவர் அறிவுறுத்தியிருப்பார். அந்த ஒவ்வாமை இருப்பது தெரியாமல் பால் குடிப்பவர்களுக்கு மூச்சு விடுவதில் சிரமம் அல்லது சளி போன்ற அறிகுறிகள் தோன்றலாம். நம் முன்னோர்கள் காலத்தில் இருந்தே பாலில் சிறிதளவு மஞ்சள்தூள் மற்றும் மிளகுத்தூள் சேர்த்துப் பருகும் பழக்கம் உள்ளது. இது பாலில் உள்ள கொழுப்பை உடல் நன்றாக உறிஞ்சுவதற்கு உதவுவதுடன், தொண்டை வலிக்கும் மருந்தாக அமைகிறது. தங்கப்பால் (Golden Milk) என்ற பெயரில் இது வெளிநாடுகளில்கூட பிரபலமாக இருக்கிறது.
உங்கள் கேள்விகளை கமென்ட் பகுதியில் பகிர்ந்துகொள்ளுங்கள்; அதற்கான பதில்கள் தினமும் விகடன் இணையதளத்தில் #DoctorVikatan என்ற பெயரில் வெளியாகும்.