2025–26 நிதியாண்டின் மூன்றாம் காலாண்டில் (Q3 FY26), சவுத் இந்தியன் பேங்க் ரூ.374.32 கோடி நிகர லாபத்தை பதிவு செய்துள்ளது. இது 2024–25 நிதியாண்டின் இதே காலாண்டில் பதிவான ரூ.341.87 கோடியுடன் ஒப்பிடுகையில் 9% வளர்ச்சியாகும். டிசம்பர் 2025 முடிவடைந்த 9 மாதங்களில், வங்கியின் மொத்த நிகர லாபம் ரூ.1,047.64 கோடியாக உயர்ந்து, ஆண்டு அடிப்படையில் 9% வளர்ச்சியை பதிவு செய்துள்ளது.
ஒதுக்கீடுகளுக்கு முன் செயல்பாட்டு லாபம் Q3 FY26-இல் ரூ.584.33 கோடியாக இருந்து, கடந்த ஆண்டின் இதே காலாண்டை விட 10% அதிகரித்துள்ளது. வட்டி அல்லாத வருவாய் ரூ.485.93 கோடியாக உயர்ந்து, ஆண்டு அடிப்படையில் 19% வளர்ச்சியை கண்டுள்ளது.

சொத்து தரத்தில் ஏற்பட்ட முன்னேற்றத்தின் தொடர்ச்சியாக, மொத்த செயல்படாத கடன்கள் 4.30 சதவீதத்திலிருந்து 2.67 சதவீதமாகவும், நிகர செயல்படாத கடன்கள் 1.25 சதவீதத்திலிருந்து 0.45 சதவீதமாகவும் குறிப்பிடத்தக்க அளவில் குறைந்துள்ளன. எழுதித் தள்ளிய கடன்களை உட்படுத்திய ஒதுக்கீடு கவர் விகிதம் 91.57 சதவீதமாக உயர்ந்துள்ளது. சொத்துகளின் மீதான வருமானம் 1 சதவீதத்துக்கும் மேல் தொடர்ந்து நிலைத்துள்ளது.
வைப்பு முனையில், சில்லறை வைப்பு ரூ.1,15,563 கோடியாக உயர்ந்து, ஆண்டு அடிப்படையில் 13 சதவீத வளர்ச்சியை பதிவு செய்துள்ளது. வெளிநாடு வாழ் இந்தியர்களின் வைப்பு ரூ.33,965 கோடியாக இருந்து, ஆண்டு அடிப்படையில் 9 சதவீத வளர்ச்சியை கண்டுள்ளது. CASA வைப்பு ஆண்டு அடிப்படையில் 15 சதவீதம் உயர்ந்துள்ளது. மொத்த கடன்கள் ரூ.96,764 கோடியாக உயர்ந்து, ஆண்டு அடிப்படையில் 11% வளர்ச்சியை பதிவு செய்துள்ளன. இதில் தங்கக் கடன் 26% மற்றும் வாகனக் கடன் 24% ஆண்டு வளர்ச்சியை கண்டுள்ளன.
நிதி முடிவுகள் குறித்து கருத்து தெரிவித்த வங்கியின் மேலாண்மை இயக்குநரும் தலைமை நிர்வாக அதிகாரியுமான திரு. பி.ஆர். சேஷாத்ரி கூறியதாவது, “தரமான கடன் வளர்ச்சி மற்றும் சொத்து தரத்தை பாதுகாப்பதில் வங்கி தொடர்ந்து கவனம் செலுத்தி வருவதாக அவர் தெரிவித்தார். குறைந்த அபாயம் கொண்ட புதிய கடன்களின் மூலம் நிலையான வளர்ச்சியை அடைவதே வங்கியின் முக்கிய நோக்கமாக இருப்பதாகவும்” அவர் கூறினார்.
டிசம்பர் 2025 நிலவரப்படி, வங்கியின் மூலதன விகிதம் 17.84 சதவீதமாக உள்ளது. இந்த நிதி முடிவுகளில், வங்கியின் முழுமையாக சொந்தமான துணை நிறுவனத்தின் நிதி விவரங்களும் சேர்க்கப்பட்டுள்ளன.