அங்கு எங்களுக்கு உறுதுணையாக நிற்க வேண்டிய அரசு துணையாக இல்லை. பல முறை விரைவு மனுக்களைத் தாக்கல் செய்திருந்தோம். அதையும் அரசு மெத்தனப்போக்காகத்தான் அணுகியது. கடைசியாக நவம்பரில் வழக்கு விசாரணைக்கு வந்தது.
அப்போது ஆவணங்களை மொழிப்பெயர்க்க ஆறு மாத அவகாசம் தேவை என்றனர். சாதிய வாக்குகள் பறிபோய் விடக்கூடாது என்பதற்காகத்தான் எங்களின் வழக்கை மெத்தனமாக இழுத்தடிக்க முயல்கிறார்கள்.

உங்களால் 6 மாதத்தில் மொழிப்பெயர்ப்பு செய்ய முடியுமெனில், ஐந்தரை ஆண்டுகளாக என்ன செய்தீர்கள்? அரசு சார்பில் ஒரு விரைவு மனுவைக் கூட தாக்கல் செய்யவில்லையே? அரசு வழக்கறிஞர்களும் யாரும் என்னை அழைத்துப் பேசவில்லையே.
எங்களை வெட்டிய அந்தக் கூலிப்படைக்கும் எங்களுக்கும் என்ன முன் தகராறு இருக்கிறது? அவர்கள் ஏன் எங்களை வெட்ட வேண்டும்? உண்மையில், அவர்களின் பின்னால் இருப்பவர்களைத்தான் நாம் உறுதியாகத் தண்டிக்க வேண்டும்.
சாதியவாதிகளின் வாக்குதான் வேண்டுமென்றால் அதை வெளிப்படையாகக் கூறுங்கள். எதற்காக சமூக நீதி அரசு, கௌசல்யாவுடன் துணை நிற்போம் என்றெல்லாம் பேசினீர்கள்? இதில் கவனம் செல்லுத்தினால் சாதியவாதிகளின் வாக்கு போய்விடும் என நினைக்கிறார்கள். ஆனால், தமிழகம் அப்படியான மண் அல்ல” எனக் காட்டமாகப் பேசி முடித்தார்.