சாம்பியன்ஸ் டிராபி தொடரை பாதிக்காது
இந்தியாவுக்கு எதிரான டி20 தொடர் நாளை தொடங்கவுள்ள நிலையில், டி20 போட்டிகள், இங்கிலாந்து அணி சாம்பியன்ஸ் டிராபி தொடருக்கு தயாராவதை பாதிக்காது என அந்த அணியின் கேப்டன் ஜோஸ் பட்லர் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் பேசியதாவது: இந்தியாவுக்கு எதிரான டி20 தொடர் மிகப் பெரிய தொடராக இருக்கப் போகிறது. சொந்த மண்ணில் இந்திய அணி மிகவும் சிறப்பாக செயல்படும். அவர்களுக்கு எதிரான இந்த தொடரை ஆவலாக எதிர்நோக்கி காத்திருக்கிறேன். போட்டி அட்டவணைகள் குறித்து பெரிதாக கவலையில்லை. இந்த டி20 தொடர் மிகவும் சுவாரசியமானதாக இருக்கப் போகிறது என நினைக்கிறேன்.
இந்திய அணிக்கு எதிராக சில ஒருநாள் போட்டிகளிலும் விளையாடவுள்ளோம். அந்த போட்டிகளுக்காகவும் ஆவலுடன் காத்திருக்கிறேன். அதிக அளவிலான டி20 போட்டிகளில் விளையாடுவது, இங்கிலாந்து அணி சாம்பியன்ஸ் டிராபி தொடருக்கு தயாராவதை பாதிக்காது என்றார்.