சாம்பியன்ஸ் டிராபி இறுதிப்போட்டியில் இந்திய அணிக்கு எதிராக ஏற்பட்ட தோல்வி குறித்து நியூசிலாந்து அணியின் கேப்டன் மிட்செல் சாண்ட்னர் பேசியுள்ளார்.
ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி கிரிக்கெட் தொடர் நேற்றுடன் (மார்ச் 9) நிறைவடைந்தது. துபையில் நேற்று நடைபெற்ற இறுதிப்போட்டியில் நியூசிலாந்தை 4 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வீழ்த்தி இந்திய அணி 3-வது முறையாக சாம்பியன்ஸ் டிராபியை வென்றது.
இதையும் படிக்க: சாம்பியன்ஸ் டிராபி: பரிசளிப்பு விழாவுக்கு அழைக்கப்படாத பாகிஸ்தான் பிரதிநிதி!
252 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கை துரத்திய இந்திய அணிக்கு கேப்டன் ரோஹித் சர்மா சிறப்பான தொடத்தைத் தந்தார். அதிரடியாக விளையாடிய அவர் 83 பந்துகளில் 76 ரன்கள் குவித்து அணியின் வெற்றிக்கு பெரிதும் உதவினார்.
மிட்செல் சாண்ட்னர் கூறியதென்ன?
இறுதிப்போட்டியில் இந்திய அணியிடம் தோல்வியடைந்த நிலையில், ரோஹித் சர்மா தங்களிடமிருந்து போட்டியை இந்திய அணிக்கு சாதகமாக எடுத்துச் சென்றுவிட்டதாக நியூசிலாந்து அணியின் கேப்டன் மிட்செல் சாண்ட்னர் தெரிவித்துள்ளது முக்கியத்துவம் பெறுகிறது.
இது தொடர்பாக அவர் பேசியதாவது: இந்திய அணியின் கேப்டன் ரோஹித் சர்மா விளையாடிய விதம் எங்களிடமிருந்து போட்டியை இந்திய அணிக்கு சாதகமாக எடுத்துச் சென்றுவிட்டதாக நினைக்கிறேன். துபை ஆடுகளங்களின் தன்மையை இந்திய அணி மிகவும் துல்லியமாக தெரிந்து வைத்திருந்து நன்றாக விளையாடினார்கள். தொடர் முழுவதும் சிறப்பாக விளையாடி இறுதிப்போட்டியில் தோல்வியடைவது கசப்பான ஒன்றாக இருக்கிறது. ஆனால், இறுதிப்போட்டியில் மிகவும் வலிமையான இந்திய அணிக்கு எதிராக விளையாடி தோல்வியடைந்துள்ளோம்.
இதையும் படிக்க: அரையிறுதியில் இந்திய மாஸ்டா்ஸ் அணி!
இறுதிப்போட்டியில் இந்திய அணிக்கு சவாலளிக்கும் விதமாக செயல்பட்டோம். ஆனால், சில சிறிய தவறுகளால் சரியான முடிவுகளைப் பெற முடியவில்லை. இருப்பினும், சிறப்பாக செயல்பட்ட நியூசிலாந்து அணியை நினைத்து பெருமையாக இருக்கிறது. இந்த தொடர் முழுவதும் நாங்கள் சிறப்பாக விளையாடினோம். துபை ஆடுகளங்களின் தன்மைக்கு ஏற்றவாறு விளையாடுவதற்கு நாங்கள் தயார் ஆனோம். ஆனால், துபை ஆடுகளங்கள் மற்றும் லாகூர் ஆடுகளங்களுக்கு இடையே நிறைய வேறுபாடுகள் இருக்கின்றன என்றார்.