1910-ல் தயாரிக்கப்பட்ட மேட்டூர் அணை திட்டம் அரசு பரிசீலனையில் இருந்தபோதும், மெட்ராஸ் மற்றும் மைசூர் அரசுகளின் உடன்பாடின்மையால் அது பெரிய பின்னடைவை சந்தித்தது. ஏனெனில், மைசூர் அரசு கண்ணம்பாடி என்ற இடத்தில் (மைசூர் நகருக்கு 12 மைல் மேலே) கிருஷ்ணராஜ சாகர் அணை திட்டத்தை முன்னெடுத்து வந்தது.
இந்த அணையின் நோக்கம், 1,25,000 ஏக்கர் நிலங்களுக்கு பாசனம் வழங்குவதோடு, 1905 இல் நிறுவப்பட்ட சிவசமுத்திரம் மின்நிலையத்துக்கு கோடை காலத்திலும் சீரான நீர் வழங்குவதாகும். வெயில் காலங்களில் அங்கு நீர்வரத்து 500 கன அடிக்கு கீழ் தாழ்ந்ததால், மின்சாரம் தயாரிக்க குறைந்தது 900 கன அடி அளவு நீர் தேவை என்பதால் அந்த அளவுக்கு கிடைக்க அணை கட்டத் தீர்மானிக்கப்பட்டது.
ஆனால், காவிரி ஆற்றின் நீரின் மீது உரிமை கோரல், இரு அரசுகளுக்கும் இடையில் தீவிரமான பிரச்சனையாக மாறியது. 1913 இல் நடுவர் மன்றம் அமைக்கப்பட்டு 1914 இல் தீர்ப்பு வந்தது. ஆனால் சென்னை மாகாணம், டெல்டா நிலங்களின் ஏற்கனவே உள்ள பாசன உரிமையை அந்தத் தீர்ப்பு கவனிக்கவில்லை எனக் கூறி மறுத்தது. இதனால் இந்திய அரசு மற்றும் SECRETARY OF STATE முன் மேல்முறையீடு செய்யப்பட்டது.
பிரச்னைக்கு தீர்வு காண, இரு அரசுகளும் ஒன்றாக இணைந்து மாதந்தோறும் கிடைக்கும் நீரின் அளவுகளை பதிவு செய்தனர். இதன் மூலம் முன்னதாகக் கூறப்பட்ட கணக்குகள் தவறானவை எனவும், நீரின் அளவு குறைவாக மதிப்பிடப்பட்டிருந்தது எனவும் உறுதி செய்யப்பட்டது. 1921 இல், இரு மாநிலங்களின் தலைமை பொறியாளர்களும், கிருஷ்ணராஜ சாகர் அணைக்கும், எதிர்காலத்தில் கட்டப்படவிருந்த மேட்டூர் அணைக்கும் பின்பற்ற வேண்டிய விதிமுறைகள் மற்றும் கட்டுப்பாடுகளை ஏற்றுக்கொண்டனர்.