சென்னை: சட்டப்பேரவை கூட்டத்தின் நிறைவு நாளான நேற்று, தனியார் மற்றும் சித்த மருத்துவ பல்கலைக்கழகங்கள் உருவாக்கும் சட்டம் உட்பட 18 சட்ட மசோதாக்கள் நிறைவேற்றப்பட்டன. சட்டப்பேரவையில் ஊரக உள்ளாட்சிகளில் கழிவுநீக்க செயல்பாடுகளுக்கு உரிமம் வழங்கும் வகையில் ஊராட்சிகள் சட்டத்திருத்த முன்வடிவை அமைச்சர் ஐ.பெரியசாமி நேற்று அறிமுகம் செய்தார்.
நெடுஞ்சாலை, கடல் சரக்கு போக்குவரத்தில் குற்றங்கள் குறித்து, நீதிமன்ற வழக்குகள் வரும்போது, சிறைதண்டனை, அபராதம் விதிப்பதை தவிர்த்து பணம் சார்ந்த உரிமையியல் தண்டத்தொகை விதிப்பதை செயல்படுத்தும் வகையில், நெடுஞ்சாலைத் துறை, கடல்சார் வாரிய சட்டங்களில் திருத்த முன்வடிவுகளை அமைச்சர் எ.வ.வேலு அறிமுகம் செய்தார்.
மின்துறை, தொழிற்கல்வி நிலையங்கள், தனியார் கல்லூரிகளில் பணம் சார்ந்த தண்டத்தொகை விதிப்பதை செயல்படுத்தும் சட்ட முன்வடிவுகளை அமைச்சர்கள் சிவசங்கர் மற்றும் கோவி.செழியன் ஆகியோர் அறிமுகம் செய்தனர்.
அதேபோல், சமய நிறுவனங்கள் கல்வி நிறுவனங்களை நிறுவுதல், பராமரித்தல், அர்ச்சகர்கள், இசைக்கலைஞர்கள், ஓதுவார்கள், அத்யாபகர்கள், வேதபாராயணம் செய்பவர்களுக்கான பயிற்சிப் பள்ளிகளை நிறுவ இந்து சமய அறநிலையக் கொடைகள் சட்டத்தில் திருத்தம் செய்வதற்கான மசோதாவை அமைச்சர் பி.கே.சேகர்பாபு அறிமுகம் செய்தார்.
இதைத்தொடர்ந்து, நிதியொதுக்கச் சட்டமுன்வடிவை அமைச்சர் தங்கம் தென்னரசு அறிமுகம் செய்தார். இவற்றைத் தொடர்ந்து, இந்த சட்ட முன்வடிவுகள், ஆய்வு செய்யப்பட்டு நிறை வேற்றப்பட்டன. இவைதவிர கடந்தாண்டு பேரவையில் நிறைவேற்றி அனுப்பப்பட்டு, ஆளுநரால் திருப்பியனுப்பப்பட்ட நிதிநிலை நிர்வாக பொறுப்புடைமை திருத்தச்சட்ட முன்வடிவு மீண்டும் நிறைவேற்றப்பட்டது.
மேலும், சட்டப்பேரவை முன்னாள் உறுப்பினர்கள் ஓய்வூதியம் உயர்வு, அம்பேத்கர் சட்டப் பல்கலைக்கழக ஆட்சி மன்றக்குழுவில் மாற்றுத்திறனாளிகளை நியமித்தல், வழக்கிழந்த சட்டங்களை நீக்கும் நீக்கறவு சட்ட முன்வடிவுகள், ஊராட்சிகளின் தனி அலுவலர்கள் பதவிக்காலத்தை மேலும் 6 மாதத்துக்கு நீடித்தல், ஊரக உள்ளாட்சிகளில் கழிவுநீக்க செயல்பாடுகளுக்கு உரிமம் வழங்குதல் ஆகிய சட்ட முன்வடிவுகள் ஆய்வு செய்யப்பட்டு நிறைவேற்றப்பட்டன.
இதுதவிர, ஒளிவுமறைவற்ற ஒப்பந்தப்புள்ளிகள் சட்ட முன்வடிவு, சித்த மருத்துவப் பல்கலைக்கழகம் உருவாக்குதல், தனியார் பல்கலைக்கழகங்கள் உருவாக்குதல், பல்கலைக்கழகங்களில் ஆசிரியரல்லா பணியிடங்களை தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் மூலம் நிரப்புவதற்கான சட்ட முன்வடிவுகள் என 18 சட்ட முன்வடிவுகள் நேற்று ஆய்வு செய்யப்பட்டு நிறைவேற்றப்பட்டன.