தனது தாயின் பெயரையே அந்த இயந்திரத்திற்கு `லட்சுமி ஆசு இயந்திரம்’ எனச் சூட்டினார் மல்லேசம். கைகளால் ஒரு புடவைக்கான ஆசு செயல்முறையை முடிக்க 6 மணிநேரம் ஆகுமென்ற நிலையை மாற்றி, வெறும் ஒன்றரை மணிநேரத்தில் அந்த வேலையை முடித்துவிடலாம் என்பதை இந்த இயந்திரம் சாதித்துக் காட்டியது.
இதன் மூலம் ஒரு நாளைக்கு 8 புடவைகள் வரை நெய்ய முடியும் என்ற நிலை உருவானது மட்டுமின்றி, ஆயிரக்கணக்கான நெசவாளர் பெண்களின் உடல் வலியும் நிரந்தரமாகத் தீர்ந்தது.
அவரது இந்த மாபெரும் தியாகத்தையும், கண்டுபிடிப்பையும் பாராட்டி, இந்திய அரசு 2017-ம் ஆண்டு இந்தியாவின் உயரிய விருதுகளில் ஒன்றான பத்மஸ்ரீ வழங்கி கௌரவித்தது. உலகப் புகழ்பெற்ற போர்ப்ஸ் பத்திரிகையின் தலைசிறந்த கண்டுபிடிப்பாளர்களின் பட்டியலிலும் இடம்பிடித்தார். 2019-ம் ஆண்டு இவரது வாழ்க்கைப் போராட்டத்தை மையமாக வைத்து `மல்லேசம்’ (Mallesham) என்ற திரைப்படம் வெளியாகி மாபெரும் வெற்றியைப் பெற்றது.

முறையான கல்வி இல்லை, பணம் இல்லை, தொழில்நுட்ப அறிவு இல்லை, சுற்றத்தாரின் ஆதரவு இல்லை… ஆனாலும் இவை எதுவுமே மல்லேசத்தின் பயணத்தில் தடையாக மாறவில்லை.
தன் தாயின் மீதான அன்பும், இலக்கின் மீதான அசைக்க முடியாத விடாமுயற்சியும் மட்டுமே அவரை ஒரு வரலாற்று நாயகனாக மாற்றியது. நமக்கான இலக்கை நோக்கிப் பயணிக்கும்போது பல தடைகளும், விமர்சனங்களும், தோல்விகளும் வரலாம்.
ஆனால் மல்லேசத்தைப் போல முழு நம்பிக்கையுடன் தொடர்ந்து செயல்பட்டால், உழைப்பிற்கான வெற்றி ஒருநாள் தேடி வரும் என்கிற நம்பிக்கையுடன் இன்றைய நாளைத் தொடங்குவோம்!