கரூர் மாவட்டம், வெள்ளியணை அருகே உள்ள குளத்தூர் பகுதியில் ஆளில்லாத ரயில்வே லெவல் கிராசிங்கைக் கடக்க முயன்ற தனியார் கல்லூரி பேருந்து மீது சரக்கு ரயில் மோதி விபத்து ஏற்பட்டது.
இந்த விபத்தில் காயமடைந்த 23 மாணவர்கள் கரூர் அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
க.பரமத்தி பகுதியில் இயங்கி வரும் தனியார் பொறியியல் கல்லூரிக்குச் சொந்தமான பேருந்து, மாணவர்களை ஏற்றிக்கொண்டு சென்று கொண்டிருந்தது. பேருந்தை பெரியசாமி என்பவர் ஓட்டிச் சென்றார்.

குளத்தூர் பகுதியில் உள்ள ஆளில்லாத ரயில்வே லெவல் கிராசிங் பாதையை ஓட்டுநர் கடக்க முயன்றபோது, எதிர்பாராத விதமாக அந்த வழியாக வந்த சரக்கு ரயில் பேருந்தின் மீது பலமாக மோதியது.
விபத்து நடந்த சத்தம் கேட்டு ஓடிவந்த அக்கம் பக்கத்தினர், உடனடியாக பேருந்திற்குள் சிக்கியிருந்த மாணவர்களை மீட்டனர். பின்னர், ஆம்புலன்ஸ் மூலம் காயமடைந்தவர்களை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.