மதுரை: பரமக்குடியை சேர்ந்த சத்தீஸ்வரன், நாமக்கல் மாவட்டத்தில் நடைபெற்ற சிறுநீரக திருட்டு சம்பவம் தொடர்பான வழக்கை சிபிஐ விசாரணைக்கு மாற்றக் கோரி, உயர் நீதிமன்ற மதுரை அமர்வில் மனு தாக்கல் செய்திருந்தார். இந்த மனு நீதிபதிகள் அனிதா சுமந்த், குமரப்பன் அமர்வில் நேற்று விசாரணைக்கு வந்தது. அரசு வழக்கறிஞர் வாதிடும்போது, “சிறுநீரக திருட்டு தொடர்பாக 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்” என்றார்.
மனுதாரர் தரப்பில், “சிறுநீரக திருட்டு வழக்கின் முதல் தகவல் அறிக்கை நகல் வழங்க வேண்டும்” என்று வலியுறுத்தப்பட்டது. அதற்கு அரசுத் தரப்பில், தேவைப்பட்டால் மனுதாரருக்கு முதல் தகவல் அறிக்கை நகல் வழங்கத் தயார் என்று தெரிவிக்கப்பட்டது. அதற்கு நீதிபதிகள், “பொதுநல வழக்கில் முதல் தகவல் அறிக்கை நகல் கோர வேண்டிய அவசியம் இல்லை” என்றனர். பின்னர், விசாரணையை நவ. 27-ம் தேதிக்கு தள்ளிவைத்து நீதிபதிகள் உத்தரவிட்டனர்.