சிலம்பரசனுக்கு சினிமாவில் இது 40-வது ஆண்டு. அதாவது அவர் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமான “உறவை காத்த கிளி’ படம் வெளியாகி, 40 ஆண்டுகள் ஆகின்றன. இதை கொண்டாடும் விதமாக அவர் நடித்த ‘சிலம்பாட்டம்’ படம் ரீரிலீஸ் ஆகிறது. இப்படம் வருகிற 23-ம் தேதி அன்று வடபழனியில் உள்ள திரையரங்கம் ஒன்றில் ரீரிலீஸ் ஆகிறது.
‘சூரியவம்சம்’, ‘வல்லரசு’, ‘சங்கமம்’, ‘வாஞ்சிநாதன்’, ‘பூவே உனக்காக’, ‘ஷாஜகான்’ உள்பட பல படங்களுக்கு ஒளிப்பதிவு செய்தவர் எஸ்.சரவணன், அவர் இயக்குநராக அறிமுகமான படம் ‘சிலம்பாட்டம்’. இந்த படத்தில் அக்கிரஹாரத்து அம்பி – அதிரடி தமிழ் என டபுள் ஆட்டம் ஆடியிருப்பார் சிம்பு. யுவனின் இசை, மதியின் ஒளிப்பதிவில் கலர்ஃபுல்லான படமாக பெயரெடுத்தது.
சினேகா, சனாகான், பிரபு, சந்தானம், நெடுமுடிவேணு, கருணாஸ் என பெரிய நட்சத்திர பட்டாளமே படத்தில் உண்டு. கடந்த 2008 டிசம்பர் 12-ல் வெளியானது இப்படம். இந்த படம் குறித்த நினைவுகளை மகிழ்வும் நெகிழ்வுமாக இங்கே பகிர்கிறார் இயக்குநர் சரவணன்.
”’சிலம்பாட்டம்’ சிம்பு சார்கிட்ட போய் சேர்ந்ததே, சுவாரஸியமானது. கதை ரெடியானதும் முதன்முதலில் ஸ்டண்ட் மாஸ்டர் கனல் கண்ணன் சார்கிட்டத்தான் சொன்னேன். ‘பக்கா கமர்ஷியல்’ ஆக இருக்குதுனு சார்’னு சொல்லி சிரஞ்சீவி சார்கிட்ட கதை சொல்ல நேரம் வாங்கி கொடுத்தார்.
சிரஞ்சீவி சாரை பார்த்து கதையை சொன்னேன். கதை ரொம்ப பிடிச்சிருந்ததுனு சொன்னார். இப்போது படத்தில் உள்ள இரண்டாம் பாதியை போல், அந்த கதையில் இல்லை. வேறொரு செகண்ட் ஹாப் தான் இருந்தது. ஆனால், சில காரணங்களால் பண்ணமுடியாமல் போனது.
விஜய் சாரின் ‘பூவே உனக்காக’, ‘ஷாஜகான்’, ‘மதுர’, ‘திருப்பாச்சி’ ஆகிய படங்களுக்கு ஒளிப்பதிவு செய்திருக்கேன். அப்போது அவர் டபுள் ஆக்ஷன் பண்ணாமல் இருந்தார். அதனால் அவர்கிட்ட இந்த கதையை சொன்னேன். அவர் டபுள் ஹேப்பி. ஆனால், ஏஸ்.ஏ.சி. சார் கதையை கேட்டுட்டு, ‘விஜய் முதல் முறையாக டபுள் ஆக்ஷன் பண்றார். இந்தக் கதையில் உள்ள இரண்டு கேரக்டர்களும் ஒருத்தரை ஒருத்தர் சந்திக்கவே இல்லை. இரண்டு கேரக்டர்களும் சந்திக்கறது மாதிரி கதையாக இருந்தால், விஜய்க்கு சரியானதாக இருக்கும்’னு சொன்னார். அப்பாவின் ஜீனில் இருக்கற ஒரு விஷயம், பையனுக்கு வருது. அதான் கதை லைன். அதனால, இரண்டு கேரக்டர்களும் சந்திக்காது என்பதால், விஜய் சாரால் பண்ணமுடியாமல் போனது.