Last Updated:
மாநிலக் கட்சி என்ற அங்கீகாரத்தைப் பெறுவதற்கு, இவ்வளவு பெரிய இழப்பைச் சந்தித்துத் தான், வாழ்க்கையைத் துறந்து தான் இந்த இடத்தை எட்டிப் பிடிக்க முடிந்தது – திருமாவளவன்
தருமபுரி மாவட்டம் கம்பைநல்லூர் அடுத்த பூமிநத்தம் பகுதியில் கடந்த 24 ஆம் தேதி பட்டாசு தயாரிப்பு ஆலையில் ஏற்பட்ட வெடி விபத்தில் திருமலா, திருமஞ்சி, செண்பகம் ஆகிய 3 பெண்கள் உயிரிழந்தனர். இந்த நிலையில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல். திருமாவளவன் உயிரிழந்தோர் குடும்பத்தினரை நேரில் சந்தித்து ஆறுதல் தெரிவித்தார். மேலும் உயிரிழந்தோரின் குடும்பத்திற்கு தலா ஒரு லட்சம் ரூபாய் நிதியுதவியும் வழங்கினார்.
இந்த நினைவேந்தல் கூட்டத்தில் பேசிய விடுதலைச் சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன், “35 ஆண்டுகால உழைப்பால், மாநில அங்கீகாரம் பெற்ற கட்சியாக மாறி இருக்கிறோம். சிலர் 50, 60 வயது வரை சினிமாவில் நடித்து விட்டு, பணத்தை தேடி, சுகத்தை தேடி, சொத்தை சேர்த்து, இளமை காலத்தை எல்லாம் சொகுசாக வாழ்ந்து, சினிமாவில் காலாவதியான காலத்தில் அரசியலுக்கு வந்து அங்கீகாரமும் பெறுகிறார்கள்.
சினிமாவின் மூலம் நன்கு சம்பாதித்து விட்டு, வாழ்க்கையை வாழ்ந்து விட்டு, அரசியலுக்கு வருகிறார்கள். அவர்கள் இதுபோன்று ஊர் ஊராகச் சென்று பேசத் தேவையில்லை. உடனே கட்சி தொடங்கலாம்; ஆட்சி அதிகாரத்தையும் பெறலாம். ஆனால் நான் கடந்த 35 ஆண்டுகளாக வாழ்க்கையை முழுமையாகத் துறந்து, தூங்க வேண்டிய நேரத்தில் தூங்காமல், சாப்பிட வேண்டிய நேரத்தில் சாப்பிடாமல், எனது இளமை முழுவதையும் இழந்து தான் இந்த இடத்தை எட்டிப் பிடிக்க முடிந்தது.
மாநிலக் கட்சி என்ற அங்கீகாரத்தைப் பெறுவதற்கு, இவ்வளவு பெரிய இழப்பைச் சந்தித்துத் தான், வாழ்க்கையைத் துறந்து தான் இந்த இடத்தை எட்டிப் பிடிக்க முடிந்தது. டாக்டர் அம்பேத்கர், தந்தை பெரியார், மார்க்ஸ் போன்ற தலைவர்களின் கொள்கைப் பிடிப்பு எனக்கு இருக்கிறது. கொள்கையில் தெளிவு இருப்பதால் எந்தக் கொம்பனாலும் என்னை விலைக்கு வாங்க முடியாது.
நான் ஒரு சராசரி அரசியல்வாதியாக இருந்திருந்தால், என்றோ இந்தக் கட்சிக்கு அங்கீகாரம் பெற்றிருக்கும். வருகிற 2026 சட்டமன்றத் தேர்தலில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி இல்லாமல் எந்த அரசியல் நகர்வும் இருக்காது. இதை நான் கர்வத்தோடு சொல்லவில்லை. இது காலத்தின் கட்டளை. இதை அரசியல் வல்லுனர்களே ஆராய்ந்து சொல்லி இருக்கிறார்கள்” எனத் தெரிவித்தார்.
Dharmapuri,Tamil Nadu
February 27, 2025 8:35 AM IST
சிலர் சினிமாவில் காலாவதியான பிறகு அரசியலுக்கு வந்து அதிகாரத்தையும் கைப்பற்றுகிறார்கள் – திருமாவளவன் விமர்சனம்
