இங்கே நந்திபகவான் சுமார் ஐந்தரை அடி உயரத்துடன் பிரமாண்டத் திருமேனியராக அருள்பாலிக்கிறார். எனவே இங்கே இவருக்கு பிரதோஷ வழிபாடுகள் மிகவும் சிறப்புடன் நடக்கின்றன. பிரதோஷ வழிபாட்டில் கலந்துகொண்டு நந்தியையும் ஈசனையும் வழிபட்டால் வேண்டும் வரம் கிடைக்கின்றன என்கிறார்கள் நாடிவரும் பக்தர்கள். இந்த ஆலயத்தின் தல விருட்சம் வன்னி மரம். இந்த மரத்தை தரிசனம் செய்து வணங்கினால் சனி பகவனால் உண்டான தொல்லைகள் தீரும் என்பது நம்பிக்கை.
இந்தக் கோயிலின் மற்றொரு சிறப்பு… சிவதுர்கை மற்றும் விஷ்ணு துர்கை இருவரின் சந்நிதியும் அமைந்துள்ளது. தோஷங்கள், தடைகள், பொருளாதாரச் சூழல் காரணமாக வெகுநாட்களாக திருமணம் தடைபட்டு வருந்தும் அன்பர்கள், இங்குள்ள சிவ துர்கையை மனமுருகி வழிபடு வது சிறப்பு. இதனால் தோஷங்கள் நீங்கி விரைவில் கல்யாணம் கைகூடும் என்பது நம்பிக்கை.
மேலும் இந்தக் கோயிலில், விநாயகர், காலபைரவர், சண்டிகேஸ்வரி, வடுகபைரவர், யோக நரசிம்மர், சரபேஸ்வரர், சப்த கன்னியர், நாகர் ஆகியோரும் தனித் தனிச் சந்நிதிகளில் அருள்கிறார்கள். இவற்றுள் வடுக பைரவர் மற்றும் சரபேஸ்வரர் சந்நிதிகளில் பக்தர்கள் மனமுருக வழிபடுகிறார்கள். இங்கே பைரவரை வழிபட்டால் மனபயம் நீங்குவதோடு நோய்கள் விலகி ஆரோக்கியம் மேன்மை அடையும் என்பது நம்பிக்கை.
சிவகங்கை சமஸ்தானத்தின் பொறுப்பில் உள்ள இந்தக் கோயில், தென் மாவட்ட மக்கள் சிறப்பித்து வழிபடும் ஆலயங்களில் ஒன்றாகத் திகழ்கிறது. சிவபெருமானுக்கு உகந்த புண்ணிய நாள்களில் இங்கு வந்து, தீபங்கள் ஏற்றிவைத்து, ஈசன் சுயம்பிரகாசரையும் தர்ம சம்வர்த்தினி அம்பாளையும் வழிபட்டால், திருமணத் தடை, கடன், சொத்துச் சிக்கல் முதலான சகல பிரச்னைகளும் தீரும் என்பது பக்தர்களின் அசைக்கமுடியாத நம்பிக்கை.