பிறவிப்பிணிக்கு மட்டுமல்ல வாழும்போது உண்டாகும் சகல பிணிகளுக்கும் மருந்தாகத்திகழ்பவன் ஈசன். ஈசனை வழிபட்டு நோய் அகன்ற அடியார்கள் பலர். ஈசனும் மருத்துவனாக மருந்தீசனாகக் காட்சிகொடுக்கும் தலங்களும் ஏராளம் உள்ளன.
அவ்வகையில் சிவங்கை மாவட்டம் திருப்பத்தூரிலிருந்து பொன்னமராவதி செல்லும் சாலையில், சுமார் 18 கி.மீ தூரத்தில் உள்ளது பரியா மருதுபட்டி என்னும் அற்புதத் தலம்.
விசேஷமான மருத விநாயகர், வேண்டுதலை நிறைவேற்றும் நெய் நந்தி, ஈசனுக்கு மூலிகைச்சாறு அபிஷேகம், நோய்களைத் தீர்க்கும் அதிசய தீர்த்தம் ஆகிய சிறப்புகளுடன் திகழும் ஊர் நோய் தீர்க்கும் தலமாகத் திகழ்கிறது.
இங்கு அருளும் ஈசனுக்கு பரியா மருதீஸ்வரர் என்பது திருநாமம். அது என்ன பரியா மருதீஸ்வரர்? இந்த ஈசன் சுயம்பு மூர்த்தி; நான்கு யுகங்கள் கடந்து நிற்பவர். ஒவ்வொரு யுகத்திலும் இவருக்கு ஒவ்வொரு திருப்பெயராம்.
கிருத யுகத்தில் செல்ல நயினார், திரேதா யுகத்தில் நல்ல நாயனார், துவாபர யுகத்தில் பரம்தலை ஆண்டவர் ஆகிய பெயர்களோடு திகழ்ந்த இறைவனுக்கு, இந்தக் கலியுகத்தில் ஆதியில் இவருக்கு, “பறியா மருந்தீஸ்வரர்’ என்பதுவே திருநாமம்.

‘பறியா மருந்து ஈஸ்வரர்’ என்றால், பறியாத மருந்தான ஈஸ்வரர் என்று பொருள். பறித்துப் பயன்படுத்துபவை மருந்து மற்றும் மூலிகைகள். ஆனால், பறிக்க அவசியம் இன்றி, தரிசித்தாலே நம் உடற் பிணியையும் மனப் பிணியையும் நீக்கும் அருமருந்தாக இந்த ஈசன் திகழ்ப்வர்.
எனவே பறியா மருந்தீஸ்வரர் என்று பெரியோர்கள் இவரைப் போற்றியிருக்கிறார்கள். அதுவே காலப்போக்கில் `பரியா மருதீஸ்வரர்’ என்ற திருநாமம் நிலைத்துவிட்டது என்கிறார்கள். மேலும் ஸ்தல மரமான மருத மரத்தைக் கருத்தில் கொண்டும் இப்பெயர் வந்திருக்கலாம் என்கிறார்கள்.