விருதுநகர் மாவட்டத்தில் சிவகாசி, சாத்தூர் உட்பட மாவட்டங்கள் முழுவதிலும் 4 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பட்டாசுக் கடைகள் உள்ளன. இதில், சிவகாசியில் மட்டும் சுமார் 3 ஆயிரம் பட்டாசுக் கடைகள் உள்ளதாகக் கூறப்படுகிறது.
இந்தப் பட்டாசுக் கடைகளில் தீபாவளி விற்பனைக்காக 3 மாதங்கள் மட்டும் 50 சதவீதக் கடைகள் இயங்கும். 20 சதவீதக் கடைகளில் ஆண்டு முழுவதும் பட்டாசு விற்பனை நடைபெறும். 30 சதவீத பட்டாசுக் கடைகள் பூட்டியே கிடக்கின்றன.
பூட்டிக் கிடக்கும் பல பட்டாசுக் கடைகளில் பல லட்சம் மதிப்பிலான பட்டாசுகளை ஸ்டாக் வைத்துள்ளனர். பட்டாசு ஸ்டாக் வைப்பதற்காகவே சிலர் பட்டாசுக் கடைகளுக்கு அனுமதி வாங்கி வைத்துள்ளனர். குறிப்பாக, சில பகுதிகளில் உள்ள பட்டாசுக் கடைகளில் வெளியே பூட்டுப்போட்டு உள்ளே சட்டவிரோதமாக பட்டாசுகள் தயாரிக்கப்படுவதாகவும் கூறப்படுகின்றன. பட்டாசுக் கடைகளுக்கு தீயணைப்புத்துறை, வருவாய்த்துறை பல்வேறு விதிமுறைகளை விதித்துள்ளது.