விருதுநகர் மாவட்டம், சிவகாசியில் தனியார் தன்னாட்சி கல்லூரி இயங்கி வருகிறது. இக்கல்லூரியில் பி.சி.ஏ 2-ம் ஆண்டு படித்து வந்த மாணவி ஒருவர், சக மாணவர் ஒருவரை காதலித்து வந்ததாகவும்… அவருடன் இணைந்து எடுத்த புகைப்படம் ஒன்று கல்லூரி மாணவ மாணவியர் மத்தியில் பரவியதாகவும் கூறப்படுகிறது.

இதனையடுத்து, கல்லூரி முதல்வர் அசோக், அம்மாணவி மற்றும் அவரின் தாயாரை அழைத்து எச்சரித்ததுடன், மன்னிப்புக் கடிதம் எழுதி வாங்கிவிட்டு எச்சரிக்கை செய்ததுடன், படிப்பை தொடருமாறு அறிவுறுத்தினாராம். இந்த நிலையில், மாணவி வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இதனையடுத்து, கல்லூரி நிர்வாகம் மிரட்டியதால்தான் அம்மாணவி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார் எனக்கூறி, எஸ்.எப்.ஐ மாணவர் சங்கத்தினர், அவரின் இறப்பிற்கு நீதி கேட்டும், உரிய இழப்பீடு கேட்டும் போராட்டம் நடத்தினர். இந்த நிலையில், கல்லூரி நிர்வாகம் காலவரையற்ற விடுமுறை அளித்துள்ளது.