கேரள மாநிலம் மலப்புரம் மாவட்டத்திலுள்ள பல்கலைக்கழகத்தின் சான்றிதழை வழங்கி, அம்மாநில இளைஞர் ஒருவர் அரசுப் பணிக்குச் சேர்ந்துள்ளார்.
அந்தச் சான்றிதழின் உண்மைத் தன்மையை ஆராய்ந்தபோது அது போலியானது என தெரியவந்தது. உடனடியாக இது குறித்து சான்றிதழ் அளித்த நபர் மீது மலப்புரம் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தினர்.
விசாரணையில், விருதுநகர் மாவட்டம் சிவகாசி பகுதியைச் சேர்ந்த ஜெயினுலாபுதீன் (40), வெங்கடேஷ் (24), அரவிந்த்குமார் (24) ஆகியோர் அதிகத் தொகையைப் பெற்றுக்கொண்டு போலியாகப் பல்வேறு பிரபலமான பல்கலைக்கழகங்களின் பெயர்களில் கல்விச் சான்றிதழ்களை போலியாக அச்சடித்து விநியோகம் செய்து வந்துள்ளது தெரியவந்துள்ளது.
இதனைத் தொடர்ந்து, போலிச் சான்றிதழ் தயாரிப்பில் ஈடுபட்ட மூன்று பேரையும் கேரள போலீசார் கைது செய்தனர்.

மேலும், போலி சான்றிதழ் தயாரிப்பிற்குப் பயன்படுத்திய கணினி, பல்வேறு முக்கிய ஆவணங்கள், போலி முத்திரைகள், பல்கலைக்கழக லோகோக்கள், பிரிண்டர்கள் உள்ளிட்டவற்றைக் கைப்பற்றி விசாரணை நடத்தி வருகின்றனர்.
மேலும் இது குறித்துச் சிவகாசி டவுன் போலீசார் நடத்திய ரகசிய விசாரணையில், ஜெயினுலாபுதீன் ஒரு போலி சான்றிதழ் தயாரிப்பு அமைப்பின் முக்கிய நிர்வாகியாக உள்ளார் என்று தெரியவந்துள்ளது.